பிரான்ஸில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டவர் இலங்கைப் பெண் என அடையாளம்! ஒருவர் கைது!!


  • குமாரதாஸன், பாரிஸ்.
பாரிஸ் பிராந்தியத்தின் அர்னோவீல் (Arnouville, in Val-d'Oise) பகுதியில் கடந்த
மார்ச் 31 ஆம் திகதி கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்த ஆசிய வம்சாவளிப் பெண் இலங்கையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முதலில் இவர் இந்திய - பாகிஸ்தான் பின்னணியைக் கொண்டவராக இருக்கக் கூடும் என்று பொலீஸார் தெரிவித்திருந்தனர்.

எனினும் அவர் பாரிஸ் புறநகரான சார்ஸல் (Sarcelles) பகுதியைச் சேர்ந்த 40 வயதான இலங்கைப் பெண் என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஆனால் அவர் இலங்கைத் தமிழரா என்பதை உடனடியாக உறுதி செய்யமுடியவில்லை அவரது பெயர் விவரங்களும் வெளியிடப்படவில்லை.

கொலை நடந்த நாளில் குறித்த பெண்ணுடன் காணப்பட்டவர் எனக் கூறப்படுகின்ற இலங்கையரான ஆண் ஒருவரை விசாரணையாளர்கள் கைது செய்ததை அடுத்தே பெண்ணின் சடலம் சிலவாரங்களின் பின்னர் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று பாரிஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கொலையுண்ட பெண் சார்ஸல் பகுதியில் கத்தோலிக்க சமூக நல அமைப்பு ஒன்றினால் நிர்வகிக்கப்படுகின்ற வதிவிடத்தில் வசித்து வந்த காரணத்தால் அவர் காணாமற்போன விடயம் உடனடியாக எவருக்கும் தெரிய வரவில்லை என்று கூறப்படுகிறது.
 
பாரிஸில் உள்ள வசிப்பிடத்தில் நடத்தப்பட்ட தேடுதலை அடுத்தே கொலையுடன் தொடர்புடைய 42 வயதுடைய நபர் கைது  செய்யப்பட்டிருக்கிறார். 

அவரது தொலைபேசி மூலமாகக் கிடைத்த முக்கிய தகவல்கள் பெண்ணின் கொலையில் தொடர்பு இருப்பதைக் கண்டறிய உதவி உள்ளன.

தடுப்புக் காவலில் விசாரணை செய்த சமயத்தில் அவர் கொலையை ஒப்புக் கொண்டார் என்றும் கூறப்படுகிறது. பாரிஸ் Versailles குற்றத் தடுப்புப் பிரிவினர் இக் கொலை தொடர்பான வழக்கு விசாரணைகளை நடத்தி வந்தனர்.

தொடர்புபட்ட செய்தி:
Previous Post Next Post