பிரான்ஸில் உணவகங்களைத் திறந்தால் “சனம் அடிக்கும்” அரசு அச்சம்!


  • குமாரதாஸன். பாரிஸ்.
பாரிஸில் வசிக்கின்ற தமிழர்கள் மத்தியில் "சனம் அடிக்கும்" என்றொரு
பேச்சு வழக்குச் சொல் புழக்கத்தில் உள்ளது. உணவகங்களில் ஒரேசமயத்
தில் பெருவாரியான வாடிக்கையாளர்கள் திரண்டு வந்து குவிவதையே "சனம் அடித்தல்" என்று குறிப்பிடுவர். 

தமிழ் சமையலாளர்கள், உணவக ஊழியர்களுக்கு மட்டுமன்றி சாதாரணமாக எவருக்குமே அதன் அர்த்தம் புரிந்து விடும்.

மே 19 ஆம் திகதி வெளி இருக்கைகள் திறக்கப்படும் முதல் நாளில் நாடு முழுவதும் உணவகங்கள், அருந்தகங்களுக்கு வெளியே மக்கள் வெள்ளம் கரை புரளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரேயடியாகக் கட்டுப்பாடுகள் இன்றி ஆட்கள் அலையாகக் கூடுவது சுகாதாரத்துக்குப் பெரும் பங்கமாகிவிடலாம் என்று அரசு அஞ்சுகிறது.

எனவே நிபந்தனைகளைப் போட்டு நெரிசலைக் குறைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி பத்துக்கு மேற்பட்ட  மேசைகள் அடங்கிய வெளி இருக்கைகளைக் கொண்டுள்ள உணவகங்கள் அவற்றில் அரைவாசி மேசைகளிலேயேவாடிக்கையாளர்களை அனுமதிக்க முடியும்.(50வீதம்).

பத்துக்கு குறைவான மேசை வசதி கொண்ட சிறிய வெளியிருக்கை உணவகங்களுக்கு 50 வீத கட்டுப்பாடு கிடையாது என்ற அரசு அறிவித்துள்ளது.

சிறிய உணவகங்கள் அவற்றின் வெளி இருக்கைகளது பரப்பளவுக்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் எத்தனைபேரை அனுமதிப்பது என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

உதாரணமாக 50 சதுர மீற்றர் பரப்புக் கொண்ட வெளி இருக்கைக்கு 25 வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம். 

அத்துடன் மேசைகளுக்கு இடையே பொலித்தீன் மறைப்புகள், அல்லது அதுபோன்று இடைவெளி பேணும் மறைப்புகளைச் செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ("du plexiglas, un paravent ou des feuillages etc")

மே 19 ஆம் திகதி உணவகங்கள், அருந்தகங்களின் வெளி இருக்கைகள்
திட்டமிட்டபடி திறக்கப்படும் என்பதை பிரதமர் Jean Castex உறுதிப்படுத்திஉள்ளார். 

ஆனால் சிலபல நிபந்தனை. களுடனேயே அது நடைமுறைப்படுத்தப் படும் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜூன் 9 ஆம் திகதி இரண்டாவது
கட்டத் தளர்வுகள் அமுலுக்கு வரும் வரை வெளி இருக்கைகள் நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இயங்க அனுமதிக்கப்படும்.  பொலீஸார் அதனைக் கண்காணிப்பர். 

பாரிஸ் நகரில் உள்ள உணவக உரிமையாளர்கள் தங்களது சிறிய வெளி இருக்கைகளை அகலப்படுத்துவதற்கான இடவசதிகளை இம் முறையும் நகரசபை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்களின் உள் இருக்கைகளில் வாடிக்கையாளர்களை அனுமதிப்பது
ஜூன் 9 ஆம் திகதி தொடங்கும். அன்றைய தினம் முதல் உள்ளே 50 வீதமான மேசைகள் அனுமதிக்கப்படும். வெளி இருக்கைகள் அன்று முதல் வழமை போன்று நூறு வீதம் இயங்கலாம்
Previous Post Next Post