யாழ்.அரச அலுவலகத்தில் இளம் பெண் மீது கத்திக் குத்து! ஆண் உத்தியோகத்தர் தற்கொலை முயற்சி!!

யாழ்ப்பாணம் - குருநகரில் அமைந்துள்ள வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களகத்தில் வேலை செய்யும் ஒருவர், அதே அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

நேற்று 12.30 மணியளவில் குறித்த பெண்ணுக்கு தலையிலும் முகத்திலும் கத்தியால் குத்திவிட்டு, இளைஞன் குளியல் அறைக்குள் இருந்துள்ளார்.

அங்கு இருந்தவர்கள் காயப்பட்ட பெண்ணை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.

சம்பவத்தை அறிந்து, சிவில் உடையில் வந்த பொலிஸார் உடனே அவரை வெளியில் வருமாறு அழைத்துள்ளனர்.

அதனை இளைஞன் செவிமடுக்காது இருந்த நிலையில், பொலிஸாருடைய தொலைபேசி கமரா மூலம் உள்ளே நிலைமையினை அறிய முற்பட்ட பொழுது, அந்த நபர் இரத்த வெள்ளத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.

உடனே கதவினை உடைத்து அவரை மீட்டு அலுவலக வாகனத்தில் அழைத்துச் சென்று அதி தீவிரசிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.

பின்னர் விசாரணையை மேற்கொண்ட பொலிஸார்,

அந்த பெண் மானிப்பாயை சேர்ந்தவரும் விவாகரத்துமானவர். இவரை அதே அலுவலகத்தில் இருந்த புலோலியை சேர்ந்த ஆண் உத்தியோகத்தர் விரும்புவதாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

ஏற்கனவே மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன், பொலிஸார் அவரை எச்சரித்து விடுவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெற்று, இரண்டு கிழமையின் பின், நேற்று இந்த கத்தி குத்து இடம்பெற்றுள்ளது.

இளைஞன், கத்தியினை கொண்டு கண்மூடித்தனமாக குத்திவிட்டு குளியல் அறையில் சென்று இன்னொரு கத்தியினால் தனது வயிற்று பகுதியில் குத்தியும் கிளித்தும் உள்ளார்.

அவரை சரியான நேரத்தில் வந்து பொலிஸார் மீட்டுள்ளனர். காயப்பட்ட பெண் அதிதீவிர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அந்த இளைஞனின் அலுவலக மேசையில் இருந்து இன்னும் இரண்டு கத்தியும் ஒரு கூரிய ஆயுதமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பிரிவினர் மிகுதி விசாரணையினை மேற்கொண்டு வருகிறார்கள்.

Previous Post Next Post