யாழில் சடலமாக மீட்கப்பட்ட இளைனுக்கு நீதி கோரி பொலிஸ் நிலையம் முன்பாகப் போராட்டம்! (படங்கள்)

காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் முன்பாக சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்திற்கு நீதி கோரி உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

காங்கேசன் துறை பொலிஸ் நிலையம் முன்பாக வீதியோரமாக நேற்றைய தினம் வியாழக்கிழமை சுயநினைவற்றிருந்த இளைஞனை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்த போது, இளைஞன் உயிரிழந்துள்ளார்.

கீரிமலை நல்லிணக்கபுரத்தை சேர்ந்த ம. ஜெனுசன் (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அந்நிலையில் குறித்த இளைஞன் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கலாம் எனும் சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை குறித்த இளைஞன் நேற்றைய தினம் மரண சடங்கொன்றில் கலந்து கொண்டிருந்த வேளை அங்கு சிலர் அவருடன் முரண்பட்டதாகவும், அவர்களே இளைஞன் மீது தாக்குதல் நடத்தியதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கொலை சம்பவம் குறித்து துரித விசாரணைகளை முன்னெடுத்து கொலையாளிகளை கைது செய்யக்கோரியே போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.




Previous Post Next Post