முல்லைத்தீவில் கணவனைப் பிரிந்து பிறிதொரு ஆணுடன் வாழ்ந்து வந்த பெண் சடலமாக மீட்பு! (படங்கள்)

முல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு முள்ளிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூதன்வயல் கிராமத்திலுள்ள தென்னங்காணியில் உள்ள கிணறொன்றிலிருந்தே நேற்று 8 ஆம் திகதி இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதே பகுதியில் வசித்து வந்த இருபிள்ளைகளின் தாயான யோகராசா ராஜினி (வயது–39) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 4ஆம் திகதியில் இருந்து குறித்த பெண்ணை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்த நிலையில் நேற்று கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே திருமணமாகி, 22, 16 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவரை பிரிந்து இன்னொரு ஆணுடன் குடும்பம் நடத்தி வந்தமை விசாரணையில் தெரிய வந்துள்ளது. முதற்கணவர் தட்டையர்மலை முத்துஐயன்கட்டில் வசித்து வந்துள்ளார். 

குறித்த பெண் கணவரைப் பிரிந்து பிறிதொரு ஆணுடன் தற்காலிக சிறுகொட்டிலில் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார் எனவும் இவர்களுக்கு பூதன்வயல் கிராம அலுவலர் பிரிவில் பதிவு இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் கைப்பை ஒன்று தென்னங்காணிக்குள் காணப்பட்டுள்ளதை தொடர்ந்து சடலம் கிணற்றினுள் இருப்பது இனம் காணப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை சட்டவைத்தியர் பி.நிலுசன், தடயவியல் பொலிஸார் ஆகியோர் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணுடன் குடும்பம் நடத்திய 33 வயதுடைய கிளிநொச்சியினை சேர்ந்த ஆண் ஒருவரை முள்ளியவளை பொலிஸார் விசாரணைக்காக அழைத்துசென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னடுத்துள்ளனர்.
Previous Post Next Post