பிரான்ஸில் அதிகரிக்கும் கொரோனாத் தொற்றால் மீண்டும் கட்டாயமாக்கப்படும் மாஸ்க்!


  • குமாரதாஸன். பாரிஸ்.
சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றுக்கள் முடிவுக்கு வந்து விட்டதாகக் கருதப்பட்டது. ஆனால் தொற்று எண்ணிக்கையின் சமீபகால அதிகரிப்புகள் கவலைகளைத் தோற்றுவித்துள்ளன.

மாஸ்க் அணிவதற்கான கட்டுப்பாடுகள் கடந்த 14 ஆம் திகதி முதல் நீக்கப்பட்டிருந்தாலும் தேவை ஏற்படின் மீண்டும் அதனைக் கட்டாயமாக்க
வேண்டிய அவசியம் ஏற்படும் என்று அதிபர் எமானுவல் மக்ரோன் தெரிவித்திருக்கிறார்.

மார்ச் 14 - 20 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் நாட்டில் சுமார் மூன்று மில்லியன் வைரஸ் பரிசோதனைகள் (antigen and PCR tests) செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்திய வாரத்தில் அது 2.5 மில்லியனாக இருந்தது என்பதைச் சுகாதாரப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் 52 ஆயிரமாக இருந்த நாளாந்தத் தொற்று எண்ணிக்கை நேற்றுப் புதன்கிழமை ஒரு லட்சத்து 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

அதிபர் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடித்துள்ள வேளையில் வலதுசாரி ரிப்பப்ளிக்கன் கட்சியின் வேட்பாளர் வலெரி பெக்ரெஸ் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார். அதனால் அவர் பிரசாரப் பணிகளை வீடியோ வாயிலாக முன்னெடுத்து வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்ரா-ஒமெக்ரோன் இரண்டு திரிபுகளினதும் கலப்புத் திரிபு என்று கருதப்படுகின்ற டெல்ராக்ரோன்( Deltacron) திரிபு பிரான்ஸில் சுமார் 40 பேருக்குத் தொற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

நாட்டின் பொதுச் சுகாதார நிறுவனத்தின் தகவலின்படி "எக்ஸ்டி"(XD variant) என்று அழைக்கப்படுகின்ற டெல்ரா - ஒமெக்ரோன் கலப்புத் திரிபு புதியதொரு திரிபு அல்ல என்றும் ஒருவருக்கு இவ்விரு திரிபுகளும் ஒரேசமயத்தில் தொற்றுவதன் மூலமே இரண்டினதும் மரபு கலந்த பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒமெக்ரோன் - டெல்ரா கலப்புத் தொற்றினால் நோயாளிகளில் பெரிய பாதிப்புகள் அவதானிக்கப்படவில்லை. அதேசமயம் இவ்விரு வைரஸ்களும் தொடர்ந்தும் ஐரோப்பிய நாடுகளில் தொற்றி வருகின்றன.
Previous Post Next Post