கனடாவில் இருந்து வாள்வெட்டுக் குழுவுக்குப் பணம் கொடுத்துத் தாக்குதல்! யாழில் சம்பவம்!! (படங்கள்)

கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டு , வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுன்னாகம், புனித அந்தோனியார் வீதியில் உள்ள வீடொன்றின் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த வீட்டினுள் அத்துமீறி நுழைந்த வன்முறைக் கும்பல் வீட்டின் பிரதான வாயில் கதவை உடைத்து நுழைந்து, ஜன்னல் கண்ணாடிகள் என்பவற்றை அடித்து நொறுக்கியத்துடன், வீட்டில் இருந்த உடமைகளையும் அடித்து நொறுக்கி அட்டகாசம் புரிந்ததுடன் வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்து பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, வீட்டின் உரிமையாளருடன் கனடாவில் உள்ள நபர் ஒருவர் முரண்பட்டு அச்சுறுத்தல் விடுத்து வந்த நிலையில், அவரது தூண்டுதலில் யாழில் உள்ள வன்முறைக் கும்பல் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post