நோர்வே இரவு விடுதியில் பயங்கரவாதத் தாக்குதல்? இருவர் பலி! பத்துப் பேர் படுகாயம்!!

  • பாரிஸிலிருந்து குமாரதாஸன்
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இரவுக் களியாட்ட விடுதிகள் அமைந்துள்ள பகுதியில் இன்று விடிகாலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். இருபது பேர்வரை காயமடைந்துள்ளனர். அவர்களில் பத்துப் பேருக்கு மோசமான சூட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

தன்னினச் சேர்க்கையாளர்கள் (LGBTQ community) அதிகமாகக் கூடுகின்ற அந்தப் பகுதியில் உள்ள 'லண்டன் பப்' (London Pub) என்ற உணவகத்தினுள் 42 வயதான-ஈரானைப் பூர்வீகமாகக் கொண்ட - நோர்வேப் பிரஜை ஒருவர்
துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளார். 

அதிகாலை ஒருமணியளவில் தாக்குதல் நடந்தது. சிறிது நேரத்தில் பொதுமக்களது உதவியுடன் பொலீஸார் அந்தத் தாக்குதலாளியை
மடக்கிப் பிடித்துக் கைதுசெய்துள்ளனர்.

அவரிடமிருந்து இரண்டு துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. பொலீஸ் மற்றும் உளவுப் பிரிவினருக்கு ஏற்கனவே தெரிந்திருந்த தாக்குதலாளி பற்றிய தகவல்களின் அடிப்படையில் இந்தச் சம்பவம் கடும் இஸ்லாமியப் பயங்கரவாத நோக்கத்தைப் பின்னணியாகக் கொண்டிருக்கலாம் என்று பொலீஸ் அதிகாரி ஒருவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

ஒஸ்லோவில் இன்று சனிக்கிழமை நடைபெறவிருந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளது பேரணியில் (Pride parade) தாக்குதல் நடத்தும் நோக்கம் இருந்திருக்கலாம் என்றும் விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர். 

பொலீஸாரின் உத்தரவின் பேரில் அந்தப் பேரணி ரத்துச் செய்யப்பட்டிருக்கிறது. நோர்வே முழுவதும் பயங்கரவாதத் தாக்குதல் விழிப்பு நிலை பேணப்படுகிறது. பொலீஸார் துப்பாக்கிகளுடன் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
Previous Post Next Post