அகதிகள் விவகாரம்! பிரான்ஸ்-இத்தாலிக்கிடையில் முறுகல்!! பலப்படுத்தப்பட்டது எல்லைப் பாதுகாப்பு!!!

பிரெஞ்சு-இத்தாலி எல்லைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதிகளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் பிரெஞ்சு எல்லை நகரமான Menton பகுதியில் அதிகளவான காவல்துறையினர் குவிக்கப்பட்டு, சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரான்ஸ்-இத்தாலி நாடுகளுக்கிடையே அகதிகள் தொடர்பாக இராஜதந்திர நடவடிக்கை முறுகல் நிலையை எட்டியுள்ளதை அடுத்து, இத்தாலியில் இருந்து அகதிகள் நாட்டுக்குள் நுழைவதைத் தடுக்கும் நோக்கோடு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எல்லை நகரங்களில் உள்ள அனைத்து தொடருந்து நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் காவல்துறையினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக மொத்தமாக 500 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் Gérald Darmanin தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இத்தாலியின் புதிய அரசாங்கம் அகதிகள் தொடர்பாக மிக இறுக்கமான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
Ocean Viking எனும் மனிதநேய கப்பல் ஒன்று கடந்த 20 நாட்களுக்கு மேலாக 230 வரையான அகதிகளை ஏற்றிக்கொண்டு கடலில் சுற்றிக்கொண்டிருந்தது. இத்தாலிக்குள் நுழைய குறித்த கப்பலுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கப்பலில் இருந்தவர்கள் கரையேற முடியாமல் நோய்வாய்ப்பட்டு அவதியுற்று வந்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று குறித்த கப்பலில் உள்ள அகதிகளுக்கு பிரான்ஸ் புகலிடம் கொடுத்துள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் பிரான்ஸ்-இத்தாலி நாடுகளுக்கிடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. அதையடுத்தே மேற்படி எல்லைப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ப்புடைய செய்தி:
Previous Post Next Post