மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் கொள்ளையிடச் சென்ற ஒருவர் வீட்டின் உரிமையாளரின் தாக்குதலில் உயிரிழந்தள்ளார். இந்த சம்பவம் நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளது. வாழைச்சேனை பாடசாலை வீதி மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த பரசுராமன் நவரட்ணம் (48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்கம்கேணி பிரதேசத்தில் நேற்று இரவு 10 மணியளவில் வீடு ஒன்றில் இருவர் கொள்ளையடிக்க சென்றுள்ளனர். இந்த நிலையில் கொள்ளையர்கள் வீட்டிலுள்ளவர்களை தாக்கி அங்கிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையடிக்க முற்பட்டனர்.
இதன்போது தாக்குதலுக்குள்ளான வீட்டின் உரிமையாளர் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள கொள்ளையர் மீது தாக்கிய போது கொள்ளையன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் சென்ற கொள்ளையர் தப்பி ஓடியுள்ளார்.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த கொள்ளையன் 63 கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர் எனவும் சம்பவதினமான நேற்று பிறிதொரு வீடு ஒன்றில் கொள்ளையடித்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டபோதே உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த குறித்த கொள்ளையனின் சடலம் மட்டு. போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.