பிரான்ஸ் - பாரிஸின் சகல வீதிகளிலும் வாகன வேகம் 30 கி.மீற்றர்! திங்கள் முதல் நடைமுறைக்கு!!


  • குமாரதாஸன். பாரிஸ்.
பாரிஸ் நகரில் கிட்டத்தட்ட சகல வீதிகளிலும் வாகனங்களைச் செலுத்துகின்ற வேகம் நாளை திங்கட்கிழமை முதல் 30 கிலோ மீற்றர்களாக வரையறுக் கப்படுகிறது. சுமார் அறுபது வீதமான வீதிகளில் ஏற்கனவே இந்த வேகக் கட்டுப்பாட்டு முறை அமுலில் உள்ளது. ஏனைய வீதிகளிலும் அது நடைமுறைக்கு வரவுள்ளது.

நகரப் பெருந் தெருக்கள் சட்ட விதிகளில் தற்சமயம் மணிக்கு 50 கிலோ மீற்றர்கள் என உள்ள வேகக் கட்டுப்பாடே 30 கிலோ மீற்றர்களாகக் குறைக்கப்படுகிறது.



எனினும் விதிவிலக்காக சில வீதிகள்(les boulevards des Maréchaux, les avenues des bois de Boulogne et de Vincennes, les Champs-Élysées ou encore l'Avenue Foch) இந்த வேகக் கட்டுப்பாட்டில் உள்ளடங்க மாட்டா.

Périphérique எனப்படுகின்ற நகரச் சுற்று வீதிகளிலும் ஏனைய பெருந் தெருக்களிலும் வேகம் தொடர்ந்தும் மணிக்கு 70 கிலோ மீற்றர்களாகவே இருக்கும்.

நகரில் வாகன வேகத்தைக் குறைப்பதற்கான காரணங்களில் பாதசாரிகளது பாதுகாப்பு முதன்மையானது. அத்துடன் நகரில் வாகனங்கள் ஏற்படுத்துகின்ற இரைச்சலைக் குறைப்பதும் இதன் நோக்கம் என்று பாரிஸ் நகரசபை தெரிவித்திருக்கிறது. மறுபக்கத்தில் சூழல் பாதுகாப்பு விடயத்தில் இந்த வேகத் தணிப்பு தாக்க ங்களை ஏற்படுத்தலாம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.

மெதுவாகச் செலுத்தப்படுகின்ற கார்கள் அதிக காபன் உமிழ்ந்து வளி மாசை அதிகரிக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே வாகனத் தரிப்பிட கட்டணங்கள் உயர்த்தப்பட்டு, தரிப்பிடத்துக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் சைக்கிள் பாதைகளை அமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நகருக்குள் கார்களின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்து இல்லாமற் செய்வதற்கு நகரசபை திட்ட மிட்டுள்ளது.

பாரிஸ் நகரைப் படிப்படியாக கார்கள் இல்லாத நகரமாக(car free city) மாற்றியமைப்பது அதன் இலக்கு ஆகும்.
Previous Post Next Post