பிரான்சுக்குள் நுழைந்த தலிபான்கள்? ஐவர் சந்தேகத்தில் கண்காணிப்பு!! திருப்பி அனுப்ப அரசுக்கு அழுத்தம்!!!


  • குமாரதாஸன், பாரிஸ். 
காபூலில் இருந்து அபுதாபி வழியாகப் பாரிஸுக்கு மீட்டுவரப்பட்ட ஆப்கானிஸ்தான் பிரஜை ஒருவரும் அவரது உறவினர்கள் நால்வரும் கண்காணிப்பின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தலிபான்களுடன் நேரடியான தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே
அந்த ஆப்கான் பிரஜையும் அவரது சகோதரர் உட்பட குடும்பத்தினர் நான்கு பேரும் பாரிஸ் Noisy-le-Grand பகுதியில் உள்ள ஹொட்டேல் ஒன்றில் மருத்துவத் தனிமைப்படுத்தலின் கீழ் வைத்துத் தீவிர மாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்ற தகவலை உள்துறை அமைச்சு வட்டாரங்கள் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளன.

1990 ஆம் ஆண்டு பிறந்த பிரஸ்தாப நபர் காபூல் நகரைத் தலிபான்கள் கைப்பற்று வதற்குச் சில தினங்களுக்கு முன் அங்கு வீதிகளில் துப்பாக்கியுடன் நடமாடினார் என்பதும், அங்குள்ள பிரெஞ்சுத் தூதரகத்தின் அருகே அமைந்துள்ள சோதனைச் சாவடி ஒன்றின் பொறுப்பாளர் அவர் என்பதும் உள்நாட்டுக் கண்காணிப்புக் கான இயக்குநர் ஜெனரல் பிரிவின் (Directorate General of Internal Surveillance- DGSI) விசாரணைகளில் தெரிய வந்துள்ளது என்று ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அவரும் அவரது குடும்பத்தினரும் தற்சமயம் தங்கியுள்ள Noisy-le-Grand பகுதியில் இருந்து வெளியே செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தான நபர்கள் இவ்வாறு நாட்டுக்குள் வர நேர்ந்தமைக்கு காபூலில் மீட்பு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான தூதரக அதிகாரிகளினது அல்லது புலனாய்வு சேவைகளினது விழிப்பின்மை காரணமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ஐந்து பேரையும் ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்புமாறு வலது மற்றும் தீவிர வலதுசாரி அரசியல் பிரமுகர்கள் குரல் எழுப்பி உள்ளனர்.

"அவர்கள் ஐவரும் இந்த மண்ணுக்குத் தேவையில்லாதவர்கள். தாமதிக்காமல் அவர்களைத் திருப்பி அனுப்பிவிட வேண்டும்" - என்று இல் து பிரான்ஸ் பிராந்தியத் தலைவி வலேரி பெக்ரஸ் ருவீற்றர் பதிவிட்டிருக்கிறார்.
 
இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு ருவீற்றர் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கும் உள்துறை அமைச்சர் ஜெரால்ட்டாமனா (Gérald Darmanin), "பிரான்ஸ் மனிதாபிமானத்துடன் விழிப்புணர்வும் கொண்ட தேசம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
 
நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமான எல்லா நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
  • இரண்டாயிரம் பேர் வருகை
இதுவரை ஆப்கான் வெளியேறிகள் சுமார் இரண்டாயிரம் பேர் விமானங்கள் மூலம் பாரிஸ் நகருக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்ற தகவலை வெளிநாட்டமைச்சு வெளியிட்டுள்ளது. 

காபூலில் இருந்து முதலில் அபுதாபியில் உள்ள இராணுவத் தளம் ஒன்றுக்கே அனைவரும் கொண்டுவரப்படுகின்றனர். அங்கு வைத்து அவர்களது பொதிகள், ஆவணங்கள், அடையாளங்கள் தீவிரமாகப் பரிசோதிக்கப்படுகின்றன. பிரான்ஸில் நுழைவதற்கான நிர்வாகப் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. கடைசியாகக் கொரோனா வைரஸ் பரிசோதனையும் நடத்தப்படுகிறது.

பாரிஸில் வந்து இறங்கியதும் பத்து நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தலின்
கீழ் வைக்கப்படுகின்றனர். இத்தகவல்களை வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
Previous Post Next Post