ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையின் எதிரொலி! ரஷ்யக் கொடியுடன் வந்த சரக்கு கப்பல் பிரான்ஸ் கடலில் தடுத்து வைப்பு!!


  • குமாரதாஸன், பாரிஸ்.
ரஷ்யக் கொடியுடன் காணப்படும் சரக்குக் கப்பல் ஒன்றை பிரான்ஸின் கரையோரக் காவல் படையினரும் சுங்கப் பொலீஸாரும் நாட்டின் மேற்குக் கடலில் தடுத்து வைத்துள்ளனர்.

போருக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது விதித்துள்ள தடைகளுடன்
தொடர்புடைய ஒரு நடவடிக்கை இது என்ற அறிவிக்கப்படுகிறது.

"பால்டிக் லீடர்" (Baltic Leader) என்ற அக் கப்பல் புதிய கார்களை ஏற்றியவாறு பிரான்ஸின் வட மேற்கே Rouen நகரில் இருந்து ரஷ்யாவின் சென் பீற்றர்ஸ் பேர்க் துறைமுகத்துக்குப் பயணித்த வழியியிலேயே திடீரென வழிமறிக்கப்பட்டிருக்கிறது. 

அக்கப்பல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடைவிதிக்கப்பட்ட ரஷ்ய வங்கி ஒன்றுடன் தொடர்புடையது என்பதை மொஸ்கோ அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

குறிப்பிட்ட வங்கிக்குச் சொந்தமானதாக இருந்த அக் கப்பல் தடைகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டது என்ற தகவலை குறிப்பிட்ட வங்கி வட்டாரங்கள் ரொய்ட்டருக்குத் தெரிவித்துள்ளன.

ஆவணங்கள் முழுவதும் பரிசோதிக்கப்பட்ட பிறகு 48 மணி நேரத்துக்குள் கப்பல் விடுவிக்கப்படும் என்று பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துப் பாரிஸில் உள்ள ரஷ்யத் தூதரகம் வெளிநாட்டு அமைச்சரிடம் தனது கண்டனத்தை வெளியிட்டிருக்கிறது.
 
ஐரோப்பியக் கடற் பகுதியில் வர்த்தகக் கப்பல்கள் இது போன்று தடுக்கப்படுவது மிக மிக அரிதான நிகழ்வு ஆகும். ரஷ்யா மீதான தடைகளை நடைமுறைப்படுத்துவதில் ஐரோப்பிய ஒன்றியம் மிக தீவிரமாக இருப்பதையே இச் சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.

இதேவேளை, உக்ரைனுக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்குவதில்லை என்ற
தனது முந்திய முடிவை ஜேர்மனி கைவிட்டுள்ளது. உடனடியாக ஆயிரம் ரொக்கெட் லோஞ்சர்களையும் 500 விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் உக்ரைனுக்கு அனுப்பிவைப்பதாக அது இன்று அறிவித்திருக்கிறது. 

உலகப் போருக்குப் பின்னர் மோதல் களம் ஒன்றுக்கு ஜேர்மனி தனது அழிவு ஆயுதங்களை அனுப்புவது இதுவே முதல் முறை என்பதால் இன்றைய அதன் தீர்மானம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலைமையில் உக்ரைன் புடினின் ஆக்கிரமிப்பில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு முழு உதவியையும் வழங்கவேண்டியது நமது கடமை என்று ஜேர்மனிய சான்சிலர் ஒலப் சோல்ஸ் அறிவித்திருக்கிறார். அவரது முடிவை உக்ரைன் அதிபர் வரவேற்று மகிழ்ச்சி வெளியிட்டிருக்கிறார்.

ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் நேட்டோவும் ஆயுத உதவிகளை அளித்து வருகின்ற போது ஜேர்மனி அதிலிருந்து விலகி இருந்தமை கூட்டணி நாடுகளிடையே அதன் மீது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தது.
Previous Post Next Post