அடுத்த வாரம் பாடசாலை நாட்களில் மாற்றம்! கல்வி அமைச்சின் புதிய அறிவிப்பு!!

நாளை ஜூன் 27 முதல் ஜூலை முதலாம் திகதி வெள்ளிக்கிழமை வரையான வாரத்தில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பான திருத்தப்பட்ட அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

நேற்று சனிக்கிழமை மாகாணக் கல்விச் செயலாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் நகர்ப்புற தேசிய பாடசாலைகளின் அதிபர்களுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து, ஜூன் 27 முதல் ஜூலை 01 வரையிலான வாரத்தில் பாடசாலைகளை நடத்துவது குறித்து கல்வி அமைச்சு செய்திக்குறிப்பை வெளியிட்டது.

எவ்வாறாயினும், நாளை ஜூன் 27இல் தொடங்கும் வாரத்தில் நாட்டில் எரிபொருள் விநியோகம் சாத்தியமில்லை என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பின்னர் கூறியது.

எனவே, கடந்த வாரம் போன்று ஜூன் 27 முதல் ஜூலை 1 வரையிலான வாரத்தில் மேல் மாகாணத்தின் கொழும்பு பிராந்தியத்திலும் அதனை அண்டிய நகரங்கள் மற்றும் ஏனைய மாகாணங்களின் முக்கிய நகரங்களிலும் பாடசாலைகளை நடத்த வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கிராமப்புற பாடசாலைகளில் நடந்தது போல், ஜூன் 27 முதல் ஜூலை 1, 2022 வரை போக்குவரத்து சிரமம் இல்லாவிட்டால் செவ்வாய், புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் பாடசாலைகளை நடத்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்படும்.

மேலும், போக்குவரத்து சிரமம் காரணமாக இந்த நாட்களில் பாடசாலைக்கு வராத ஆசிரியர்கள் தனிப்பட்ட விடுப்பாக பதிவு செய்ய வேண்டாம் என்று பணிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், அந்த வாரத்தில் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், மாகாண கல்விச் செயலாளர்கள் மற்றும் மாகாண கல்விப் பணிப்பாளர்கள் மாகாண ஆளுநர்களுக்கு அறிவித்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்குமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

ஜூன் 27 இல் தொடங்கும் வாரத்தில் க.பொ.த உயர்தரத்திற்கான தவணைப் பரீட்சைகளை நடத்த நீங்கள் திட்டமிட்டால், இரண்டு வாரங்களுக்குப் பின்னர் தவணைப் பரீட்சைகளை நடத்தப்படலாம்.
Previous Post Next Post