யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளியை பார்க்க சென்றவர் மீது காவலாளிகள் கும்பலாக தாக்குதல்!

யாழ்.போதனா வைத்தியசாலைக்க நோயாளி ஒருவரை பார்ப்பதற்கு சென்றிருந்தவர் மீது காவலாளிகள் தாக்கிய சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 26ம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தமது தாயாரை பார்ப்பதற்காக இருவர் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

இதன் போது ஒருவர் மட்டுமே வைத்தியசாலை விடுதிக்குள் சென்று நோயாளரை பார்வையிட முடியும் என பாதுகாப்பு உத்தியோகத்தரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, ஏன் பாரபட்சமாக நடக்கிறீர்கள்? வேறு நோயாளியை பார்ப்பதற்கு ஒரே நேரத்தில் சில பார்வையாளர்களை அனுமதித்தீர்களே என தெரிவித்து நோயாளியை பார்க்கச் சென்றவர் பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்படவே ஒன்றுகூடிய வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த தபாலக ஊழியர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்றார்.

இது தொடர்பாக யாழ்.பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post