யாழில் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற மனநோயாளியை அழைக்கச் சென்றவர் குத்திக் கொலை! (படங்கள்)

கொடிகாமம் மீசாலை – புத்தூர் சந்திக்கு அண்மையிலுள்ள வீடொன்றில் வைத்து குடும்பத்தலைவர் ஒருவர் கூரிய ஆயிதத்தினால் கொடூரமாகக் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தெல்லிப்பழை உளநல மருத்துவமனையின் நோயாளர் நலன்புரி சங்கத்தை சேர்ந்த நாகராஜா (வயது-48) நோயாளர் பராமரிப்பாளரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற வீட்டில் வசிக்கின்ற 20 வயதான இளைஞர் மனநல சிகிச்சைகளுக்காக கடந்த செவ்வாய்க்கிழமை தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

நேற்றைய தினம் அந்த இளைஞர் மருத்துவமனையில் இருந்து தப்பி வீட்டுக்கு வந்துள்ளார். அவரை தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக நோயாளர் பாராமரிப்பாளரை இளைஞரின் உறவினர் அழைத்து வந்துள்ளார்.

கொடிகாமம் ரயில் நிலைய வீதியில் அமர்ந்திருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞரோடு நலன்புரிச்சங்க பராமரிப்பாளர் அவரது வீட்டுக்கு சென்றுள்ளார்.

இளைஞரின் உறவினர் முச்சக்கர வண்டியில் வீதியோரத்தில் கருத்திருந்துள்ளார்.

வீட்டுக்குள் இருந்து இளைஞர் மட்டும் வெளியே வந்து மீண்டும் ரயில் நிலைய வீதியில் அமர்ந்திருந்துள்ளார். இதனால் வீட்டுக்குள் சென்ற நோயாளர் பராமரிப்பாளரை காணாத இளைஞரின் உறவினர் அவருக்கு நீண்ட நேரமாக அலைபேசியில் அழைத்தும் பதில் இல்லாததால் புகையிரத வீதியில் அமர்ந்திருந்த இளைஞரிடம் கேட்டுள்ளார்.

அவரை வீட்டு முற்றத்தில் வைத்து அலவாங்கால் குத்தி கொலை செய்துவிட்டேன் என்று இளைஞர் தெரிவித்துள்ளார்.

வீட்டு முற்றத்திற்கு சென்று பார்த்தபோது குறித்த நபர் முகத்தில் பலத்த காயங்களோடு மூச்சடங்கிக் கிடந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post