பிரான்ஸில் நாளை நாடளாவிய வேலைநிறுத்தம்! கல்வி, மருத்துவம், விமான சேவைகள் செயலிழக்கும்!!

பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு உதவி, சம்பள உயர்வு மற்றும் பொதுத் துறைகளில் ஆண்-பெண் சமத்துவம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துப் பிரதான தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நாடளாவிய ஒரு நாள் வேலை நிறுத்தம் நாளை 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அரசின் ஓய்வூதியத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஓரணியில் திரண்டு போராட்டங்களில் ஈடுபட்ட பின்னர் நாட்டின் முக்கிய தொழிற்சங்கங்கள் அனைத்தும் நாளைய ஒரு நாள் வேலை நிறுத்தத்திலும் பேரணிகளிலும் மீண்டும் அணி சேர்கின்றன.

நாடெங்கும் பல நகரங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டப் பேரணிகள் இடம்பெறவுள்ளன. பாரிஸில் மாபெரும் தொழிலாளர் பேரணி பிற்பகல் 2மணியளவில் la place d'Italie (13e arrondissement) இல் இருந்து ஆரம்பமாகும்.

நாட்டின் மூன்று முக்கிய ரயில்வேப் போக்குவரத்துத் தொழிற்சங்கங்களும் (CGT-Cheminots, Sud-Rail, CFDT-Cheminots) நாளைய வேலை நிறுத்தத்தில் இணையுமாறு தொழிலாளர்களைக் கேட்டிருக்கின்றன.

பாரிஸ் இல்-து-பிரான்ஸ் பிராந்திய SNCF ரயில் சேவைகளில் தடை தாமதங்கள் ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பாரிஸ் நகர மெற்றோ மற்றும் பஸ் போக்குவரத்துச் சேவைகள் எந்தளவுக்குப் பாதிக்கப்படும் என்ற தகவல் இன்று வியாழக்கிழமை மாலையே தெரியவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாரிஸ் ஓர்லி விமான நிலையத்தின் 40 சதவீதமான விமான சேவைகள் நாளை தடைப்படவுள்ளன.

தேசிய கல்வித் துறை ஆசிரியர் தொழிற்சங்கங்கள் பலவும் வேலை நிறுத்தத்தில் இணைவதால் பாலர் மற்றும் ஆரம்பப் பள்ளிகள், (écoles maternelles et élémentaires) நாளை செயலிழக்கும். கல்லூரிகள், உயர்நிலைப் பள்ளிகளும் (collèges et lycées)ஸ்தம்பிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.

மருத்துவ ஆலோசனை பெறுவதற்கான கட்டணங்களை(tarif des consultations) அதிகரிக்கும் கோரிக்கையை முன்வைத்துத் தனிப்பட்ட பொது மருத்துவர்களைப் (les médecins libéraux) பிரதிநிதித்துவம் செய்கின்ற சகல தொழிற்சங்கங்களும் நாளை முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் இணைகின்றன. இதனால் பொது மருத்துவ சேவைகள் தடைப்படும் நிலைமை தோன்றலாம்.
Previous Post Next Post