யாழ்.பல்கலை மாணவிகளுக்கு பாலியல் ராங்கிங்! மாணவனின் வீடு அடித்துடைப்பு!!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு பல்கலைக்கழக நிர்வாகத்தால் வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவன் ஒருவரின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த மாணவனின் வீட்டுக்குச் சென்ற நால்வர், மாணவன் அங்கு இல்லாத நிலையில் வீட்டிலிருந்த பொருட்களை அடித்து உடைத்து விட்டுச் சென்றுள்ளனர் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டை மூத்த விநாயகர் கோவிலடியில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றது.

வீட்டுக்குள் நுழைந்த நால்வர், மாணவனை அழைத்துள்ளனர். அவர் அங்கில்லாத நிலையில் வீட்டின் முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த காரின் கண்ணாடிகள் மற்றும் யன்னல் கண்ணாடிகளை அடித்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர்.

பகிடிவதைக் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகங்களுக்குள் உள்நுழைய இடைக்காலத் தடைவிதிக்கப்பட்ட மாணவர்கள் இருவரில் முதலாவதாக இடைக்காலத் தடை அறிவிப்பு வழங்கப்பட்ட மாணவனின் வீடே இன்றிரவு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





Previous Post Next Post