மதுபோதையில் கணவன் அட்டகாசம்! குழந்தையுடன் மனைவி தற்கொலை முயற்சி!!

மதுபோதையில் தினமும் கணவன் செய்யும் அட்டகாசம் தாங்க முடியாது குடும்பப் பெண் ஒருவர் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தென்மராட்சி கெற்பேலிப் பகுதியில் நேற்று நடந்துள்ளது.

தென்மராட்சிப் பிரதேசத்தில் ஊரடங்க அமுலில் உள்ள தினமும் மதுபோதையில் வரும் கணவர், தன்னை அடித்துத் துன்புறுத்துவதால் குழந்தையைத் தூக்கிக் கொண்டு பற்றைக்காடு ஒன்றுக்குள் மறைந்திருந்து பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

எனினும் அந்தப் பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர், கிராம அலுவலர் மற்றும் குடும்பநல உத்தியோகத்தருக்கு வழங்கிய தகவலையடுத்து பெண்ணும் குழந்தையும் காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் சட்டவிரோதமாக வீடுகள், பற்றைக்குள் வைத்து கள், கசிப்பு, கஞ்சா என்பவற்றின் விற்பனை அதிகமாக இடம்பெற்று வருவதாகப் பொதுமக்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

இதனால் குடும்பங்களுக்குள் தினமும் சண்டை, சச்சரவுகள் அதிகரித்துச் செல்கின்றன.

புகைத்தல் உள்ளிட்ட போதைப் பொருள் கொரோனாத் தொற்றை அதிகரிக்கும் என்று சுகாதாரத் துறைச் சார்ந்த அதிகாரிகளால் தொடர்ச்சியாக எச்சரிக்கப்பட்டு வரும் நிலையில், அதனைக் கவனத்தில் கொள்ளாமல் தொழில்கள் முடங்கி வருமானம் இல்லாத வேளையில் கையில் இருக்கும் சொற்ப பணத்தையும் வயது வேறுபாட்டின்றி ஆண்கள் போதைப் பொருட்களுக்காகச் செலவழிப்பது கவலைக்குரியது.  இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை எமது பிரதேசங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறும் போது அதுபற்றி பொதுமக்கள் தாமாக முன்வந்து 119 என்ற பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அல்லது உங்கள் பகுதி பொலிஸ் நிலையத்திற்குத் தகவலை வழங்குமாறு சாவகச்சேரி சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

Previous Post Next Post