கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்தாரா முல்லைத்தீவு பெண்? பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

முல்லைத்தீவுப் பெண் ஒருவர் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகச் செய்தி ஒன்று ஊடகங்களில் பரவி வருகின்றது. இது குறித்துப் பொதுமக்களை விழிப்புடன் இருக்க வலியுறுத்தியுள்ளது வட மாகாண சுதேச மருத்தவத் திணைக்களம்.

அதன் பணிப்பாளர் சியமா துரைரத்தினம் இது குறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார்.

முல்லைத்தீவைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனாவுக்குக்கான மூலிகை மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக வடக்கில் உள்ள தொலைக்காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

இது போலிச் செய்தியாகும். அந்தப் பெண் தயாரித்திருப்பதாகக் கூறியுள்ளது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் மூலிகை மருந்தாகும். நமது சூழலில் உள்ள மூலிகை மருந்துகள் பலவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. சுவாசப் பிரச்சினைகளுக்கான மருந்துகள் பலவும் உள்ளன. இவற்றின் மூலம் பல ஆயுர்வேத சித்த நோய் எதிர்ப்பு மூலிகைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறான ஒரு நோய் எதிர்ப்பு மூலிகையையே அந்தப் பெண் தயாரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அது கொரோனாத் தடுப்பு மூலிகை அல்ல. கொரோனாக் காலத்தில் தயாரிக்கப்பட்டதால் அது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. அத்துடன் போலிச் செய்திகளாலும் அது கவனத்தை ஈர்த்துள்ளது.

கொரோனாத் தடுப்பு நடவடிக்கையான சித்த ஆயுர்வேத, யுனானி வைத்திய முறைகளின் கீழான நோய் எதிர்ப்பு மூலிகை மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றது. காத்தான்குடி கொரோனா வைத்தியசாலை சுற்றாடலில் வாழ்பவர்களுக்கு யுனானி வைத்திய முறையின் கீழ் தயாரிக்கப்பட்ட நோய் எதிர்ப்பு மூலிகைகள் வழங்கப்பட்டன.

எனினும் மேற்படி மூலிகைகள் முறையான பரிசோதனைக் கூடத்தில் தயாரானது. அல்லது தயாரிப்பின் பின் முறையான பரிசோதனையின் மூலம் அங்கீகாரம் பெற்றது. எனினும் புதுக்குடியிருப்புப் பெண் தயாரித்தது அவரது சொந்த உணவு உற்பத்தி நிலையத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உடையாதாக அந்த மருந்து இருக்கும் நம்புவதாக அந்தப் பெண் தெரிவித்தார். எனினும் பரிசோதனைக்காக அனுப்பிய பின்னரே அதன் இறுதி முடிவு தெரிய வரும் எனத் தெரிவித்தார்.

அந்தப் பெண்ணின் முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால் போலிச் செய்திகளை வெளியிடுவது அந்தப் பெண்ணின் முயற்சிக்கு எதிர்மறையான விளைவை ஏற்படுத்தி விடும் அபாயத்தையும் கொண்டுள்ளது.

அந்தப் பெண் தயாரித்த நோய் எதிர்ப்பு மூலிகையை கொரோனாத் தடுப்பு மூலிகை என ஊடகங்கள் போலிச் செய்தி வெளியிட அவரது முயற்சி ஆரம்பத்திலேயே எதிர்மறையான முடிவை சந்திக்கும் அபாயம் உள்ளது.

வட மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர் சியாமா துரைரத்தினம் விடுத்துள்ள எச்சரிக்கைக் குறிப்பில், சுதேச மருந்துகள் உற்பத்திற்காக அனுமதி பெற அந்த நிறுவனம் ஒரு பதிவுகள் செய்யப்பட்ட தகமை கொண்ட மருத்தவரின் கண்காணிப்பில் இருத்தல் வேண்டும். விற்பனை செய்யப்படவுள்ள ஒவ்வொரு சித்த ஆயுர்வேத மருந்தும் தனித்தனியே அனுமதி பெறப்பட வேண்டும்.

உணவு மருந்துகள் சட்டத்தின் கீழ் உள்ளடக்கப்படும். மூலிகை உணவுகள், மூலிகைப் பானங்கள் என்ற போர்வையில் மருந்துகள் தயாரித்தல் தண்டனைக் குற்றம். இவ்வாறான உற்பத்திகள் ஆபத்தானவை. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

மூலிகை மருந்துகள் உற்பத்தி செய்வதற்கான அனுமதியை ஆயுர்வேத ஆணையாளரே வழங்க முடியும். கொரோனாவுக்கான மூலிகை மருந்து என்ற பெயரில் வெளிவரும் செய்திகள் தொடர்பில் விழிப்பாக இருங்கள். வடக்கு மாகாணத்தில் சந்தேகத்திற்கான சுதேச மருந்துகள் விற்பனை தொடர்பில் தங்கள் முறைப்பாடுகளை 021 221 4358 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு வழங்கலாம் என்றார்.
Previous Post Next Post