சலூன்கள் திறப்பது தொடர்பில் அரசாங்கம் விடுத்த அறிவித்தல்!

சுகாதார கட்டுப்பாடுகளைப் பின்பற்றி சிகை அலங்கரிப்பு நிலையங்கள், அழகு நிலையங்களை மீளத் திறக்க சுகாதார அமைச்சர் அனுமதியளித்துள்ளார்.

சுகாதார துறையினரால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை உரிய வகையில் பின்பற்றப்படவேண்டும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் ஆலோசனையின் படி, முடி வெட்டுதல் உள்ளிட்ட மிக அத்தியாவசிய சேவைகளை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி அறிவுறுத்தியுள்ளார்.

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதாரப் பாதுகாப்புத் தரங்களுக்கு ஏற்ப போதுமான இடவசதியுடன் பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டது. சிகை அலங்கரிப்பு நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்களின் சேவைகள் தொடர்பில் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை ஊடாகக் கண்காணிக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

“நாங்கள் இன்று அழகுத் துறையினருடன் கலந்துரையாடினோம். சிகை அலங்கரிப்பு நிலையங்களைத் திறப்பதற்கு அரவு அனுமதியளிக்கவேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.

இந்த கோரிக்கைகள் அனைத்திற்கும் கவனம் செலுத்த வாய்ப்பு திறக்கப்பட்டது. அரசும் சுகாதாரத் துறையும் பெரும் தியாகங்களைச் செய்வதால் உலகில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்துள்ள போதிலும், இலங்கையில் நிலமை இன்னும் சமாளிக்கக்கூடியதாக உள்ளது.

துறை வல்லுநர்கள் கோரியதால், அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்கு வருகை தருபவர்களுக்கு, குறிப்பாக சமூக இடைவெளி, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சேவைகளை வழங்கவேண்டும்” என்று சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராட்சி தெரிவித்தார்.
Previous Post Next Post