கால்கள் கட்டப்பட்டு, வலையில் சுற்றப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம்! (படங்கள்)

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்குப்பிட்டி கடல் பகுதியில் காணப்பட்ட சடலம் உடல் கூற்று பரிசோதனைக்குட்படுத்த கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

பூநகரி சங்குப்பிட்டி கடற்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம் ஒன்று மிதந்த நிலையில் காணப்பட்டுள்ளது. அதன் கால்கள் கட்டப்பட்டுள்ளதுடன், மீன்பிடி வலையினால் சுற்றப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இது குறித்த தகவல் வழங்கப்பட்டதை அடுத்து நேற்று மாலை பூநகரி, சாவகச்சேரி பொலிஸார் மற்றும் கடற்படையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

மீன்பிடி வலைகள் சுற்றிய நிலையில் காணப்படும் குறித்த சடலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த உடலத்தை சட்ட வைத்திய அதிகாரி A.L வீரசிங்க மற்றும் தடயவியல் பொலிசார் பார்வையிட்டு அறிக்கையிட்டது.

குறித்த சடலத்தை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் பதில் நீதவான் s.விஜயராணி முன்னிலையில் இன்று பகல் கடல்ற்படையினரின் உதவியுடன் சடலம் கரைக்கு எடுத்துவரப்பட்டது.

அவர் பார்வையிட்டதைத் தொடர்ந்து குறித்த சடலம் மீட்கப்பட்டு உடல்கூற்று பரிசோதனைகளிற்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

குறித்த நபர் தொடர்பர் அடையாளம் காணப்படாத நிலையில் பூநகரி பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் கைதடி நாவற்குழி தெற்கு பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய சதாசிவம் நாகராசா என்பவரை 26.04.2021 முதல் காணவில்லை என தெரிவித்து அவர்களின் உறவினர்கள் குறித்த பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.

குறித்த பகுதியில் உள்ள அவரது மகளின் வீட்டில் படுக்க சென்ற நிலையில் அவர் காணாமல் போயுள்ளதாக அவ்விடயம் தொடர்பில் பொலிசாருக்கு குடும்பத்தார் தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த சடலம் காணாமல் போன வருடையது என உறவினர்கள் அடையாளம் காட்ட முடியவில்லை.

குறித்த மரணம் கொலையாக இருக்கலாம் எனவும், நடைபெற்று சில நாட்கள் கடத்திருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. 


Previous Post Next Post