பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை வாக்குகளுடன் இன்று அதிகாலை நிறைவேறியது.

இதையடுத்து பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

342 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.

இந்நிலையில் எதிர்கட்சிகள் தங்களது பெரும்பான்மையை நிரூபித்துள்ளமையை அடுத்து புதிய பிரதமரை பாராளுமன்றம் நியமிக்க உள்ளது.

பாகிஸ்தானின் புதிய பிரதமரை தேர்வு செய்வதற்காக பாராளுமன்றம் நாளை திங்கட்கிழமை கூடுகிறது.

புதியதாகத் தெரிவு செய்யப்படும் பிரதமர் அடுத்த தேர்தல் நடைபெறவுள்ள ஒக்டோபர் 2023 வரை ஆட்சியில் இருக்க முடியும்.

இதேவேளை, நம்பிக்கையில்லா தீா்மானம் மீதான வாக்கெடுப்பு மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பெயர் இடம்பெற்றுள்ளது.

வாக்கெடுப்பு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு இம்ரான் கான் கூட்டாளியான பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் கீழ் சபையின் சபாநாயகர் தனது ராஜினாமாவை அறிவித்தார்.

அத்துடன், இம்ரான் கானின் பி.ரி.ஐ கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற கட்டடத்தை விட்டு வெளியேறினர்.

வெளியேறுவதற்கு முன்னர் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் ஒரு சர்வதேச சதித்திட்டம் என அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டனாக இம்ரான் கான் 2018 இல் நடந்த தேர்தலில் வென்று பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவியேற்ற அவர், ஊழலுக்கு எதிராக போராடி, சரிந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்வதாக உறுதியளித்தார்.

ஆனால் பாகிஸ்தான் தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இதனால் இம்ரான் கான் தனது உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியவில்லை.

மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து அவருக்கு ஆதரவளித்த கூட்டணிக் கட்சிகள் கூட்டணியில் இருந்து தொடர்ச்சியாக விலகியதால் அவரது அரசு பெரும்பான்மையை இழந்தது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கையில்லா தீர்மானத்தை தவிர்க்க பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை எதிர்கொள்ள இம்ரான் கான் முன்னெடுத்த திட்டமும் பயனளிக்கவில்லை.

இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது கடந்த 3-ஆம் திகதி வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் துணை சபாநாயகர் காசிம் சூரி நம்பிக்கை வாக்கெடுப்பை நிராகரித்தார். அதையடுத்து இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார்.

இந்த நடவடிக்கை அங்கு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த விவகாரத்தை பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உமர் அட்டா பாண்டியல் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது.

இந்த விசாரணை முடிவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதி ஆரிப் ஆல்வியின் நடவடிக்கை சட்ட விரோதமானது எனவும், அது செல்லாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அத்துடன் நாடாளுமன்றத்தை நேற்று சனிக்கிழமை கூட்டுவதற்கு அறிவிப்பு வெளியிடுமாறு சபாநாயகர் ஆசாத் காசியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அன்றே இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post