மூன்று வாரங்களுக்கு முடங்கப் போகும் யாழ்ப்பாணம்?

தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடிக்கும் பட்சத்திலேயே எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் யாழ்ப்பாணத்தைக் காப்பாற்றி விடலாம் என்று யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் தெரிவித்துள்ளார்.

“யாழ்ப்பாணத்தில் 319 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள நிலையில் 50 பேரை மாத்திரமே பரிசோதனை செய்துள்ளோம். எனவே அனைவரது மாதிரிகளையும் மூன்று தடவைகளாவது பரிசோதனை செய்யவேண்டுமாயின் ஆயிரம் தடவைகள் ஆய்வுகூடச் சோதனைக்குட்படுத்தவேண்டும். அதனை விரைந்து செய்வதற்கு எம்மிடம் வசதிகளும் இல்லை” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவற்றைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏகாம்பரநாதன் தேவநேசன் மேலும் தெரிவித்ததாவது;
யாழ்ப்பாணத்தில் 319 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களைவிட சிலர் வெளியில் இருக்க முடியும். அதனால் கோரோனா தொற்றுள்ளவர்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்திவிட்டோம் என்று கூறமுடியாது.

எனவே யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊரடங்குச் சட்டத்தை நீடித்து வைத்து மக்களின் நடமாட்டைத்தைக் கட்டுப்படுத்தி வைக்கவேண்டிய நிலமை உள்ளது.

அத்துடன் யாழ்ப்பாணக் குடாநாட்டில் கொரோனா தொற்றுப் பரம்பல் அதிகரித்தால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலோ அல்லது மாகாண வைத்தியசாலைகளிலோ போதியளவு வசதிகள் இல்லை.

யாழ்ப்பாணத்தில் அடையாளப்படுத்தி முதலாவது கொரோனா நோயாளி கொழும்புக்கும் ஏனைய 6 பேரும் வெலிகந்தைக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 5 கொரோனா நோயாளிகள் வரும் போது அங்குள்ள மருத்துவ சேவையாளர்கள் மத்தியில் ஒருவகை அச்சம் உருவாகும் – என்றார்.
Previous Post Next Post