பிரான்ஸ் கடற்படையினர் 750 பேர் இலங்கைக்கு விஜயம்!


  • குமாரதாஸன், பாரிஸ்.
கொரோனா வைரஸின் பிடியில் உள்ள இலங்கைக்கு பிரான்ஸின் கடற்படை அணி ஒன்று விஜயம் செய்துள்ளது.

பிரான்ஸின் கடற்படையின் "ஜொந் தாக்" அணி (JEANNE D’ARC mission) என்ற வருடாந்தப் பயிற்சிப் பயணங்களின் ஒரு கட்டமாக 750 கடற்படை வீரர்கள்
அடங்கிய அணி இந்த வாரம் இலங்கையில் தங்கவுள்ளது.

கடற்படையினரது விஜயம் இலங்கையுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதுடன் இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று இரு நாடுகளும் தெரிவித்துள்ளன.
 
இலங்கையின் பாதுகாப்பு, சுகாதாரம், சுற்றுலாத் துறைகளது அமைச்சுகளின்
ஒருங்கிணைவுடன் ஏற்பாடாகி உள்ள இந்த விஜயத்தின் போது பிரெஞ்சுக்
கடற்படையினர் சிகிரியா, அனுராதபுரம், மின்னேரியா சூழலியல் பூங்கா, யால சரணாலயம் மற்றும் உடவளவ போன்ற சுற்றுலா மையங்களுக்குச் செல்லவுள்ளனர்.

மிக விழிப்பான உயிரியல் சுகாதாரப் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளுடன் (under strict bio-secure travel bubble conditions) பயணங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன என்று கொழும்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஆனால் நாடு பெரும் வைரஸ் தொற்றலைக்குள் சிக்கி அல்லாடும் சமயத்தில் வெளிநாட்டுப் படையினர் பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருப்பது அங்கு பலத்த விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது.

நாட்டின் மக்களுக்கு கட்டுப்பாடு போட்டுத் தடுக்கப்பட்ட பகுதிகளுக்குள் பெரும் எண்ணிக்கையான வெளிநாட்டுப் படையினர் உல்லாசப் பயணம் செல்வதை அனுமதிப்பது இலங்கை அரசின் "இரட்டை நிலைப்பாட்டைக்" காட்டுவதாக வனவிலங்குகள் மற்றும் சூழலியல் செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆனால் பிரான்ஸின் படையினர் இலங்கையில் தங்கவுள்ள மூன்று நாட்களும் சுமார் மூவாயிரம் இரவு தங்கும் அறைகளைப் பதிவு செய்திருப்பதை உள்நாட்டு உல்லாசப் பயணத் தொழிற்துறையினர் வரவேற்றுள்ளனர் என்று கொழும்பில் செய்தி வெளியாகி உள்ளது.

யால தேசிய வனவிலங்கு சரணாலயம் (Yala National Park) நாளை செவ்வாய்க்கிழமை (ஜூன் ஒரு நாள் மட்டுமே பிரான்ஸின் படையினருக்காகத்
திறக்கப்படும் என்று இலங்கை வனவிலங்குகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
 
பிரான்ஸின் படையினரது இந்த விஜயத்தின் மூலம் இலங்கைக்குத் துறைமுக வருவாயாக 125 மில்லியன் ரூபாக்களும், ஹொட்டேல் மற்றும் உல்லாசத்துறை வருமானமாக 125 மில்லியன் ரூபாக்களும் கிடைக்கும் என்ற தகவலை கொழும்பில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தை ஆதாரம் காட்டி பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது.

பிரான்ஸின் கடற்படையின் 'FNS Tonnerre' 'FNS Surcouf' ஆகிய இரண்டு விமானம்
தாங்கிக் கப்பல்களின் ஆசிய பசுபிக் பயணங்களது தொடர்ச்சியாக அந்தக் கப்பல்களைச் சேர்ந்த படையினரில் 750 பேர் அடங்கிய அணியே இலங்கையில் இறங்கியுள்ளது.

எகிப்து, ஜிபூத்தி (Djibouti) இந்தியா, இந்தோனேசியா, வியட்நாம், ஜப்பான் மலேசியா ஆகிய நாடுகளையும் உள்ளடக்கிய இந்தக் கடற்படைப் பயணத்தில் ஈடுபட்டிருக்கும் இரு கப்பல்களும் ஜூலை 14 ஆம் திகதி பிரான்ஸ் வந்தடையவுள்ளன.
Previous Post Next Post