பிரிட்டனில் குளிர்காலப் பகுதியில் புதிய வைரஸ் அலை? நாளாந்தத் தொற்று ஒரு லட்சமாக அதிகரிக்கும்!


  • குமாரதாஸன், பாரிஸ்.
உலகில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் அதன் மாறுபாடைந்த திரிபுகள் தொடர்ந்தும் தலையெடுத்து வருகின்றன.

ஐரோப்பாவில் வைரஸ் பரவலுக்குச் சாதகமான குளிர்கால நிலை தொடங்குவதால் வரும் நாட்களில் தொற்றாளர்கள் எண்ணிக்கை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டனில் கடந்த ஒரு வார காலமாகத் தினசரி தொற்றாளர்களது எண்ணிக்கை நாற்பது ஆயிரத்துக்கு மேல் பதிவாகி உள்ளது. கடைசியாக நேற்று அந்த எண்ணிக்கை 49,139 ஆக உயர்ந்துள்ளது.

பிரிட்டிஷ் சுகாதார அமைச்சர் சஜித் ஜேவிட் (Sajid Javid) பிரதமரின் டவுணிங் வீதி அலுவலகத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது நாடு குளிர்காலத்தில் புதியதொரு தொற்று அலையைச் சந்திக்கும் என்ற எச்சரிக்கை யை விடுத்தார். பனிக் காலத்தில் ஒரு நாள் தொற்று ஒரு லட்சம் வரை அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

பனிக் காலப்பகுதியில் முன்னெடுக்க வேண்டிய மாற்று சுகாதாரத் திட்டம் ஒன்றை(Covid Plan B)பிரிட்டிஷ் அதிகாரிகள் தயாரித்து வருகின்றனர். மாஸ்க், சமூக இடைவெளி போன்ற விதிகளை மற்றொரு தடவை இறுக்கமாக நடைமுறைப்படுத்துவது உட்பட பல வழிமுறைகள் அதில் அடங்கியுள்ளன.

அமெரிக்கத் தயாரிப்பான வைரஸ் எதிர்ப்பு மாத்திரைகளைப் (antiviral molnupiravir) பயன்படுத்தி தொற்றாளர்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் இந்த மாத்திரைகள் விநியோகிக்கப்படவுள்ளன என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தொற்றாளர் எண்ணிக்கை 50 ஆயிரம் வரை உயர்ந்துள்ள போதிலும் கடந்த குளிர்காலப் பகுதியில் நிகழ்ந்தமை போன்று உயிரிழப்புகள் இன்னமும் அதிகரிக்கவில்லை. தடுப்பூசிகள் நன்கு செயற்படுவதையே இது காட்டுகின்றது என்று அமைச்சர் சஜித் ஜேவிட் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்ரா வைரஸ் திரிபின் இன்னொரு வடிவமே தற்சமயம் பிரிட்டனில் பரவிவருவதாகக் கூறப்படுகிறது. பிரதமர் பொறிஸ் ஜோன்சன் சமூக இடைவெளி உட்பட சகல கட்டுப்பாடுகளையும் நீக்குகின்ற அறிவிப்பை "Freedom Day" என்ற பெயருடன் கடந்த ஜூலை 19 ஆம் திகதி அறிவித்திருந்தார். அதன் பிறகு நாடு முழுவதும் முழுமையான இயல்பு நிலை போன்றுகட்டுப்பாடற்ற தன்மை காணப்பட்டது.

பிரான்ஸுடன் ஒப்பிடும் போது பிரிட்டனிலும் சனத் தொகையில் 73 வீதமானவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசியையாவது பெற்றுள்ளனர். ஆயினும் அங்கு தொடர்ந்தும் தொற்றாளர்களது எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

பிரான்ஸில்நாளாந்த தொற்றுக்கள் 4ஆயிரத்து 500 ஆக உள்ள நிலையில் பிரிட்டனில் அது பத்துமடங்கு அதிகமாகக் காணப்படுகிறது.

ஜரோப்பாவில் வைரஸ் தடுப்பூசி ஏற்றும் முன்னெடுப்புகளை முதலில் ஆரம்பித்த நாடு பிரிட்டனே ஆகும். ஆனால் சொந்த தயாரிப்பாகிய அஸ்ராஸெனகா தடுப்பூசியின் எதிர்ப்புத் திறன், ஏனைய பைஸர் போன்ற மெசஞ்சர் ஆர்என்ஏ தடுப்பூசி களது திறனை விடக் குறைவானது என்பது ஆய்வுகளில் தெரியவந்திருந்தது.

புதிய திரிபுகளின் தொற்றை எதிர்ப்பதில் அஸ்ராஸெனகா தடுப்பூசியின் செயற்றிறன் குறைவாக இருப்பதால் மூன்றாவது ஊக்கித் தடுப்பூசி ஏற்றும் திட்டமும் அங்கு முன்னெடுக்கப்பட்டுவருகிறது.
Previous Post Next Post