பிரான்ஸ் அதிபர் தேர்தல்: இரண்டாம் சுற்றில் மக்ரோனை வெல்லப் போகும் பெக்ரெஸ்!


  • குமாரதாஸன். பாரிஸ்.
ஜேர்மனியில் 16 ஆண்டுகாலம் நீடித்த அங்கெலா மெர்கல் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் பிரான்ஸில்முதல் முறையாகப் பெண் அதிபர் ஒருவரது தலைமைத்துவத்துக்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

அங்கெலா மெர்கல், மார்க்கிறேட் தட்சர் போன்ற இரும்புப் பெண்களது செல்வாக்கினால் கவரப்பட்டவர் என்று தன்னைத் தானே பெருமையாகக் கூறிக் கொள்கின்றவர் வலெரி பெக்ரெஸ்.

கடந்த வாரம் அவரது வலது அணிக் கட்சிக்குள் நடந்த வாக்கெடுப்பில் கட்சியின் தூண்களான ஆண்கள் பலரை முந்திக் கொண்டு முன்னணிக்கு வந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

அதிபர் மக்ரோனைப் பதவி கவிழ்ப்பேன் என்ற கோஷத்துடன் அவர் தனது அதிபர் தேர்தல் பிரசார அணிகளை ஒன்று திரட்டத்தொடங்கியுள்ளார்.

மைய வாதியாகத் தன்னைக் காட்டிக் கொள்கின்ற அதிபர் மக்ரோனைப் பொறுத்த வரை ஏப்ரல் தேர்தலில் அவரது மீள் வெற்றி உறுதி என்ற நிலை கடந்த வாரம் வரை இருந்து வந்தது.

தீவிர வலது சாரிகளான மரீன் லூ பென் மற்றும் எரிக் செமூர் போன்றவர்களால் மட்டுமே அவர் சவாலைச் சந்திக்க நேரிடும் என்று கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வந்தன.

மரீன் லூ பென் அம்மையாரோ அன்றிப் புது முகமான எரிக் செமூரோ இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினால் அது மக்ரோனின் வெற்றியைத் திடமாக உறுதிப்படுத்தும். ஆனால் அவ்வாறிருந்த கள நிலை இந்த வாரம் திடுதிப்பென மாறிவிட்டது.

நாட்டின் பாரம்பரிய பழைமைவாதிகள் வழி வந்த 'லே ரிப்பப்ளிக்கன்' கட்சியின் அதிபர் வேட்பாளராக வலெரி பெக்ரெஸ் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து அவர் மக்கள் செல்வாக்கில் முதனிலை பெற்று வருவதைப் புதிய கருத்துக் கணிப்புகள் உறுதி செய்துள்ளன. நேற்று வெளியாகிய கணிப்பு ஒன்று பெக்ரெஸ் இரண்டாவது சுற்றில் அதிபர் மக்ரோனைத் தோற்கடிப்பார் என்று முதல் முறையாக எதிர்வு கூறியுள்ளது.

வாக்களிப்போரின் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்ட அந்தக் கணிப்பின்படி வலெரி பெக்ரெஸ் முதல் சுற்றில் 20 வீதமான வாக்குகள் பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி 52% வாக்குகளால் மக்ரோனைத் தோற்கடிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. மக்ரோன் முதற் சுற்றில் 23 சதவீதமும், இரண்டாவது சுற்றில் 48% வீதமும் வாக்குகளைப் பெறுவார் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
Previous Post Next Post