மார்ச் 05 முதல் மின்வெட்டு இடம்பெறாது! நாளை முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு!!

எதிர்வரும் 5-ஆம் திகதி சனிக்கிழமை முதல் நாடு முழுவதும் தடையின்றி மின்சாரம் வழங்க முடியும் என அதிகாரிகள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனைத்து பொறுப்பு வாய்ந்த தரப்பினருக்கும் பணிப்புரை விடுத்தார்.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகங்களின் அதிகாரிகளுடன் நீண்ட விவாதத்திற்குப் பின்னர் தாமதமின்றி எரிபொருளை இறக்குமதி செய்வது, எரிபொருள் இருப்புகளைப் பராமரித்தல் மற்றும் மின் உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நிலக்கரியை வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் மார்ச் 5 முதல் மின்வெட்டு இருக்காது என அதிகாரிகள் ஜனாதிபதிக்குத் தெரிவித்தனர்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் எரிபொருள் விநியோகம் நாளை வியாழக்கிழமை முதல் வழமை போன்று ஆரம்பிக்கப்படும். எனவே பொதுமக்கள் அச்சமடைந்து எரிபொருள் சேகரிப்பதை தவிர்க்குமாறு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விசேட கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அமைச்சர் பசில் ராஜபக்ச, அமைச்சர்களான காமினி லொக்குகே, உதய கம்மன்பில, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, மஹிந்தானந்த அளுத்கமகே, ரமேஷ் பத்திரன, இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, மத்திய வங்கியின் ஆளுநர், ஜனாதிபதியின் செயலாளர், ஜனாதிபதியின் பிரதம ஆலோசகர், அமைச்சுக்களின் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post