யாழில் இரு தரப்பு முரண்பாடு இரு கிராமங்களுக்கு இடையேயான மோதலாக நீடிப்பு; இருவர் கைது: 25 பேர் தேடப்படுகின்றனர்!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை துன்னாலை மேற்கு பகுதியில் இரு கிராமங்களுக்கு இடையேயான மோதலில் 4 நாள்களாக நீடிக்கும் நிலையில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 25 இற்கும் மேற்பட்டோர் தேடப்பட்டு வருகின்றனர். இவ்வாறு நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

வாள்கள், கற்கள் மற்றும் போத்தல்களினால் மோதல்கள் இடம்பெறுவதாக பொலிஸார் கூறினர்

சம்பவம் தொடர்பில் 7 முறைப்பாடுகள் நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்துள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

"நான்கு நாள்களுக்கு முன்னர் இரண்டு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாற்றமடைந்தது. அது பின்னர் கிராமங்களுக்கு இடையிலான மோதலாக மாறியுள்ளது.

சம்பவத்தில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. சிலர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். எனினும் மோதல்கள் தொடர்கின்றன.

இன்று மாலை வரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பெயர் குறிப்பிடப்பட்ட 25 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

இன்று நண்பகல் 12.30 தொடக்கம் மாலை 6.30 மணிவரை அடங்கியிருந்து மோதல் மீண்டும் இன்றிரவு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று பொலிஸார் கூறினர்.
Previous Post Next Post