ஜேர்மன் குடியுரிமைக்காக காத்திருக்கும் புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியான செய்தி!

புலம்பெயர்ந்தோர் ஜேர்மன் குடிமக்களாவதை எளிதாக்குவது தொடர்பில் ஜேர்மன் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜேர்மனியில் வாழ்ந்துவரும் வெளிநாட்டவர்கள், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க எட்டு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்ற விதியை மாற்றி, ஐந்து ஆண்டுகளில் விண்ணப்பிக்கும் வகையில் புதிய சட்டவரைவு ஒன்றை உருவாக்க உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக ஜேர்மன் பத்திரிகையான Bild இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன், ஜேர்மனியுடன் நன்கு ஒன்றிணைந்து வாழ்வோர் மூன்று ஆண்டுகளுக்குப் பின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வகை செய்யும் நடைமுறை ஒன்றும் திட்டத்தில் உள்ளது. ஆனாலும், இன்னமும் எதுவும் முடிவுசெய்யப்படவில்லை, திட்டங்கள் விவாத அளவிலேயே உள்ளன என்பதையும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவர்களுக்கு ஜேர்மனியில் பிறந்த குழந்தைகளுக்கு, அவர்களுடைய பெற்றோரில் ஒருவராவது ஜேர்மனியில் சட்டப்படி ஐந்து ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் பட்சத்தில், தாமாகவே ஜேர்மன் குடியுரிமை கிடைக்கும்.

67 வயதுக்கு மேற்பட்டவர்கள் மொழித்தேர்வில் பங்கேற்கும்போது, இனி அவர்கள் எழுத்துத் தேர்வில் பங்கேற்கவேண்டியிருக்காது. அவர்களால் ஜேர்மன் மொழி பேசமுடிந்தால் போதும், ஜேர்மன் குடியுரிமை பெறலாம்.

இரட்டைக் குடியுரிமையை அனுமதிக்க, அதாவது, வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறும்போது, தங்கள் சொந்த நாட்டுக் குடியுரிமையை இழக்கத் தேவையில்லை என உள்துறை அமைச்சக வட்டாரம் தெரிவித்துள்ளதாக ஒரு பத்திரிகை கடந்த வார இறுதியில் செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post