புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பிரான்ஸில் புதிய சட்டம்!

புதிய சட்டம் ஒன்றின் மூலம் சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் திட்டமிட்டுவருகிறார்.

புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்துவதற்காக புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வர பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் திட்டமிட்டுவரும் நிலையில், அது தொடர்பான சட்டவரைவு ஒன்று 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

அந்த சட்டவரைவு குறித்து பேசிய பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Gerald Darmanin, இது ஒருங்கிணைந்து வாழ்வோரை நல்ல முறையில் வாழவைப்பதும், வெளியேற்றப்படுபவர்களை சரியான முறையில் வெளியேற்றுவதைக் குறித்ததும் ஆகும் என்றார்.

சற்றே கடினமான வார்த்தைகளை பயன்படுத்திய அவர், நமக்காக வேலை செய்யும் ஆட்கள்தான் நமக்குத் தேவை, நம்மைக் கொள்ளையடிப்பவர்கள் அல்ல என்றார்.

புதிய புலம்பெயர்தல் சட்டம், புகலிடம் மறுக்கப்பட்டவர்களில் 12 பேர் வரை மேல்முறையீடு செய்யலாம் என இருக்கும் தற்போதைய நடைமுறையை, இனி 3 பேர் மட்டுமே மேல்முறையீடு செய்யலாம் என மாற்ற உள்ளது.

அதாவது, புகலிடம் மறுக்கப்பட்டோரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், குழந்தைகளாக பிரான்சுக்குள் புலம்பெயர்ந்தவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடும்போது, அவர்களை எளிதாக நாட்டை விட்டு வெளியேற்ற தடையாக இருக்கும் பாதுகாப்பு படிகளை நீக்க உள்ளது அந்த சட்டம்.

சமீப காலமாக சிறார் குற்றவாளிகள் குறித்த விடயம் பிரான்சில் கவனம் ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிடத்தக்க விடயம் என்னெவென்றால், தேவையிலிருக்கும் உணவகத் துறை முதலான பொருளாதாரத் துறைகளில் சட்ட விரோதமாக பணியாற்றி வருவோர் உட்பட வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு பணி உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
Previous Post Next Post