யாழில் மாணவிகளுடன் சேட்டை! தடுக்கச் சென்ற மாணவன் மீதும் தாக்குதல்!! 19 மற்றும் 21 வயது இளைஞர்கள் கைது!!!

சாதாரண தர பரீட்சை எழுதி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் சேட்டை விட்ட இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை காப்பாற்ற முற்பட்ட மாணவரை இளைஞர்கள் குழுவொன்று தலைக்கவசத்தால் தாக்கியுள்ளது.

நெல்லியடி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலை பரீட்சை மண்டபத்தில் பரீட்சை எழுதி விட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவிகளுடன் , பாடசாலைக்கு அருகில் உந்துருளிகளில் நின்ற இரு இளைஞர்கள் சேட்டை விட்டதுடன், விரும்பத்தகாத வகையில் நடந்து கொண்டுள்ளனர்.

இதன்போது பரீட்சை எழுதிவிட்டு வந்த சக மாணவன் இளைஞர்களிடம் இருந்து மாணவிகளை பாதுகாக்கும் முகமாக செயற்பட்ட போது , மாணவனை தலைக்கவசத்தால் தாக்கி விட்டு அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளால் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து , விரைந்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இரண்டு இளைஞர்களைக் கைது செய்ததுடன் மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.

கைதானவர்கள் 19 மற்றும் 21 வயதுடையவர்கள்.

மேலும், பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்கு அருகில் கூடும் இளைஞர்கள் மாணவிகளுடன் பல்வேறு விதமான சேட்டைகளை புரிவதாகவும் , மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்களை விற்பனை செய்வதாகவும் பல்வேறு முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

இந்நிலையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதினை தொடர்ந்து , சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸாரின் கண்காணிப்பு இருக்கும் எனவும் , ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post