யாழில் சிறுவர் இல்லத்தில் துன்புறுத்தப்பட்ட சிறுமிகள்! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

யாழ்ப்பாணம் இருபாலையில் கிருஸ்தவ சபை ஒன்றினால் அனுமதியின்றி நடத்தப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டு மீட்கப்பட்ட 13 சிறுமிகளும் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிறுமிகளுக்கு தேவையின்றி விற்றமின் சி மற்றும் டி மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இருபாலை பகுதியில் உள்ள கானான் ஐக்கிய சபை என்ற கிருஸ்தவ சபையினால் அனுமதியின்றி சிறுவர் இல்லம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அலுவலகர்கள் இன்று முற்பகல் அங்கு சென்றனர்.

அதன்போது 13 சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்கள் துன்புறுத்தப்பட்டதாகவும் உரியவகையில் உணவு வழங்கப்படவில்லை என்றும் விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட சிறுமிகள் சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டு மருத்துவ அறிக்கை கோரப்பட்டது.

“பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் சேர்க்கப்பட்டவர்களே 14 சிறுமிகளும். அவர்கள் கட்டாய மதமாற்றத்துக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் நாய்களுடன் விளையாட வேண்டும் என்ற நிர்ப்பந்தத்துக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். விற்றமின் சி மற்றும் டி மாத்திரைகள் தேவையின்றி வழங்கப்பட்டுள்ளன.

சிறுமிகள் துன்புறுத்தலுக்கு உள்படுத்தப்பட்டமைக்கான அடையாளங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தம்மை வேறு சிறுவர் இல்லங்களில் சேர்க்குமாறு கோரியுள்ளனர்” என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

சிறுமிகள் 14 பேரையும் யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்த சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, வடக்கு மாகாண கல்வி அமைச்சில் மாணவர் விடுதி என்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post