யாழ்.விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி! அம்மம்மாவினால் நஞ்சூட்டப்பட்டுக் கொலை!! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!!

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் விடுதியிலிருந்து 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி வெளியாகியுள்ளது.

தனது அம்மம்மாவினால் சிறுமி நஞ்சூட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி, பரமேஸ்வரா சந்தியிலுள்ள விடுதியொன்றில் நேற்று சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. அருகில் குற்றுயிராக அம்மம்மா காணப்பட்டார்.

திருகோணமலையை சேர்ந்த அவர்கள், கடந்த 9ஆம் திகதி அந்த விடுதிக்கு வந்துள்ளனர். சிறுமிக்கு உளச்சிக்கல்கள் உள்ளதாகவும், அதற்கு நொதேர்ன் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற வந்ததாகவும் விடுதியில் குறிப்பிட்டுள்ளார்.

மறுநாள் அவர் வெளியில் சென்று வந்தார். அதன் பின்னர் இருவரும் அறையை விட்டு வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி பணியாளர்கள் நேற்று அறையை தட்டியும் சத்தம் வரவில்லை. இதையடுத்து அறையின் ஒரு பகுதியை உடைத்து பார்த்த போது இருவரும் படுக்கையில் அசைவற்றிருந்தனர்.

அவர்கள் உயிரிழந்து விட்டதாக விடுதி நிர்வாகத்தினால் கோப்பாய் பொலிசாருக்கு அறிவித்தனர். கோப்பாய் பொலிசார் அறையை உடைத்து சென்றபோது, சிறுமி உயிரிழந்திருந்தார். அவரது சடலம் பழுதடைந்திருந்தது.

அம்மம்மா குற்றுயிராக காணப்பட்டார். இதையடுத்து அவசர நோயாளர் காவு வண்டி அழைக்கப்பட்டு, அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். அவரை நோயாளர் காவு வண்டியில் ஏற்றியபோது, "என்னை எங்கு கொண்டு செல்கிறீர்கள்?“ என கேட்டார்.

பின்னர் நினைவிழந்ததை போல காணப்பட்டார். அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தற்போது அவரது உடல் நிலை சாதாரண நிலைக்கு திரும்பி விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறுமியின் சடலம் இன்று உடற்கூராய்வுக்குட்படுத்தப்பட்டது. இதில், ஆபத்தை ஏற்படுத்தும் குறிப்பிட்ட வகை மருந்தொன்றை சிறுமிக்கு வழங்கி, கொல்லப்பட்டுள்ளது தெரிய வந்தது.

பரமேஸ்வரா சந்திக்கு அண்மையிலுள்ள விடுதிக்கு இருவரும் வந்த பின்னர், மறுநாள் அம்மம்மா மட்டும் வெளியில் சென்று வந்திருந்தார். அப்பொழுது, ஆபத்தை ஏற்படுத்தும்- விசேட சந்தர்ப்பங்களில் மட்டும் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட வகை மருந்தொன்றை தனியார் மருந்தகமொன்றில் வாங்கியுள்ளார். சாதாரண பொதுமக்கள் அந்தவகை மருந்துகளை வாங்க முடியாது.

சிகிச்சை பெற்றுவரும் 53 வயதான அம்மம்மா, மருத்துவமாதாக (midwife) பணியாற்றியவர். அவர் தனது பணி அட்டையை காண்பித்து, சிரமமின்றி மருந்துகளை மருந்தகங்களில் வாங்கலாம். அப்படியே, 10ஆம் திகதியும் ஆபத்தான மருந்துகளை வாங்கியுள்ளார்.

சிறுமிக்கும் மருந்துகளை செலுத்தி, தனக்கும் செலுத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சிறுமி உயிரிழந்தார். அவர் உயிர் பிழைத்திருந்தார்.

விடுதி அறைக்குள் அவர் எழுதிய தற்கொலை குறிப்பொன்றும் மீட்கப்பட்டது. குடும்பத் தகராற்றினால் தற்கொலை முடிவெடுத்ததாக அதில் குறிப்பிட்டுள்ளார். விடுதியில் சுத்தம் செய்ய பயன்படுத்தும் குறிப்பிட்டவகை இரசாயன பொருளொன்றும் மீட்கப்பட்டது. அதனை எதற்காக கொள்வனவு செய்தார் என்பது இதுவரை தெரியவில்லை.

அவரது மகள்- சிறுமியின் தாயார்- முஸ்லிம் நபர் ஒருவரை திருமணம் செய்து, உயிரிழந்த சிறுமி பிறந்தார். அதன் பின்னர், அந்த தம்பதி பிரிந்து விட்டனர். சிறுமி அம்மம்மாவின் பராமரிப்பில் வளர்ந்தார். குடும்பத் தகராறுகளினால் தற்கொலை முடிவெடுத்துள்ளனர்.

சிறுமியின் அம்மம்மா சுமார் 2 வருடங்களின் முன்னரும் இதே விதமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது 2 நாட்கள் கோமா நிலையில் இருந்து, வைத்தியசாலையில் உயிர்பிழைத்துள்ளார்.
Previous Post Next Post