யாழ். தொழில்நுட்பக் கல்லூரிக்குள் ரவுடிகள் அட்டகாசம்! ஆயுதங்களுடன் புகுந்ததால் பரபரப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் இரு மாணவர்களுக்குடையிலான மோதல் வன்முறையாக மாறியதால் விரிவுரையாளர்கள் மூவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அவசர பொலிஸ் பிரிவுக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து யாழ்.பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இம் மோதலுக்கு காரணமான மாணவன் தப்பித்த நிலையில் அவரால் அழைத்து வரப்பட்ட 6 பேரில் ஒருவர் மாணவர்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் - கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டது. அவர்களில் ஒருவர் வெளியில் சென்று 6 பேரை அழைத்து வந்துள்ளார்.

அவர்கள் கத்தி ஒன்றுடனும் வாள் ஒன்றுடனும் தொழில்நுட்பக் கல்லூரிக்குள் புகுந்துள்ளனர். அதனால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டது.

எனினும் மாணவர்கள் இடையே மோதல் இடம்பெறவில்லை. வந்தவர்களில் ஒருவர் விரிவுரையாளர்களுக்குத் தலைக்கவசத்தால் தாக்கியுள்ளார். அத்துடன் அங்கு மின்குமிழ் ஒன்று தாக்கிச் சேதமாக்கப்பட்டுள்ளது.

மாணவர்களால் ஒப்படைக்கப்பட்டவர் முல்லைத்தீவைச் சேர்ந்தவர். அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தன்னுடன் வந்தவர்களின் பெயர் விபரங்கள் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், தொழில்நுட்பக் கல்லூரிக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இம் மோதல் சம்பவம் தொடர்பில் வரும் திங்கட்கிழமை எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாகக் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி சமூகம் அறிவித்துள்ளது.





Previous Post Next Post