யாழில் எவ்வாறு பரவியது கொரோனா? தனிமைப்படுத்தல் நிலையத்தில் நடப்பது என்ன? வெளியாகியது அதிர்ச்சித் தகவல்!

யாழ்ப்பாணம் பலாலியில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தின் பாதுகாப்புத் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றுச் சந்தேகத்தில் அங்கு தடுத்து வைக்கப்படும் ஒருவரிலிருந்து இன்னொருவருக்குக் கொரோனா பரவக் கூடிய வகையில், தனிமைப்படுத்தல் நிலையம் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மருந்துவப் பரிசோதனைகள் எவையும் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும், மருத்துவர்களும் அவர்களைச் சென்று பார்வையிடுவதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சுவிஸ் மத போதகருடன் நெருங்கிப் பழகிய தாவடி வாசிக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து மத போதகருடன் நெருங்கிப் பழகிய 20 பேர் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் 4 அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 6 பேருக்கு கடந்த முதலாம் மற்றும் மூன்றாம் திகதிகளில் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தது. எஞ்சிய 14 பேருக்கும் இனம்காணப்படவில்லை. நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்டச் சோதனையில் 8 பேருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தது.

சுவிஸ் மத போதகருடன் கடந்த மாதம் 15 ஆம் திகதியே அவர்களுக்கு இறுதியாகத் தொடர்புபட்டிருந்தனர். சுமார் 28 நாட்கள் கழிந்த பின்னர் அவர்களுக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தது பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்து கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஆறு பேரிடமிருந்து எஞ்சியோருக்குப் பரவியிருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

அவ்வாறு கொரோனா பரவுவதற்கான வாய்ப்புக்கள் தனிமைப்படுத்தல் நிலையத்தில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அறைகள் ஒவ்வொன்றிலும் கட்டில்கள் குறித்த இடைவெளியில் போடப்பட்டுள்ளன. 4 அறைகளிலும் ஒவ்வொரு அறைகளுக்கும் ஒரு குளியல் அறை, மலசலகூடமே உண்டு. அந்த அறைகளில் உள்ள அனைவரும் அதனையே பயன்படுத்த வேண்டும்.

இதேவேளை உணவு அருந்துவதற்கு தனிமைப்படுத்தப்படவுள்ளவர்கள் ஓர் பொது இடத்திலேயே அமர வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அத்துடன் உணவுகளும் ஒரு பெட்டியில் ஒன்றாகப் போட்டே வழங்கப்படுகின்றன. இவையெல்லாம் கொரோனாத் தொற்று ஒருவருக்கு ஏற்பட்டாலும் ஏனையோருக்குப் பரவக் கூடிய சூழல் இருப்பதையே எடுத்துக் காட்டப்படுகின்றது.

மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் சாதாரண மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை. அத்துடன், மருத்துவ ரீதியான கண்காணிப்பும் மேற்கொள்ளப்படுவதில்லை. மருத்துவர்களும் அவர்களைச் சென்று பார்வையிடுவதில்லை என்று கூறப்படுகின்றது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியிருந்த ஏனையோருக்கு கொரோனாத் தொற்று நீண்ட நாட்களில் பின்னர் கண்டறியப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி, தனிமைப்படுத்தல் நிலையங்கள் இராணுவத்தினரதும் சுகாதார சேவைகள் பணியாளர்களதும் கண்காணிப்பில் இருக்கின்றன. அதனை அவர்கள் சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.

எவ்வாறு இந்தத் தொற்று ஏற்பட்டது என்றும் தெளிவாகக் கூறிவிட முடியாது. மத போதகர் ஊடாக வந்ததா? அல்லது அங்கு தங்கியிருந்தவர்கள் ஊடாக வந்ததா? என்பது பற்றி தெளிவாகக் கூறமுடியாத நிலைமை காணப்படுகின்றது.

கொரோனாத் தொற்று உள்ள ஒருவர், சந்தேகத்திற்கிடமானவர்கள் இருக்கின்றபோது அவர்கள் ஒருவரோடு மற்றவர்கள் குறிப்பிட்ட இடைவெளியைப் பேண வேண்டும். தனிமைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் அனைவரையும் ஒன்று கூடுகின்ற சந்தர்ப்பங்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்றார்.

Previous Post Next Post