வடமராட்சியில் மீண்டும் பதற்றம்! காயமடைந்த பெண்களுக்கு உணவு கொண்டு சென்ற இரு பெண்கள் கைது!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை மாளிகை திடல் பகுதியில் நடந்ததாக கூறப்படும் தாக்குதல் சம்பவத்துக்கு பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் ஊடகம் ஒன்றுக்கு விளக்கமளித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பொலிஸாரால் எவரும் தாக்கப்படவில்லை. அந்த பகுதியில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக எமக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து குறித்த பகுதியில் நேற்றைய தினம் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பாரவூர்தி ஒன்று அடையாளம் காணப்பட்டது. எனினும் அந்த பாரவூர்தியை எடுத்து வருவதற்கு அந்த மக்கள் மறுப்பு தெரிவித்தனர். குறித்த பாரவூர்தியை கொண்டு வருவதற்கு எமது குழுவினரால் முடியவில்லை. இன்று பாரவூர்தியை கொண்டு வருவதற்கு சென்ற போது பாரவூர்திக்கான அனுமதி பத்திரங்களை இல்லை என அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

இதன் போது மற்றுமொருவரை பாரவூர்தியின் உரிமையாளர் என சிலர் குறிப்பிட்டனர். இந்தநிலையில் அவரை கைது செய்வதற்கு முற்பட்ட போது அங்குள்ள சில பெண்கள் அதற்கு தடையாக செயற்பட்டு அவரை காப்பாற்றினார்கள்.

அவரை இன்றும் கைது செய்ய முடியாமல் போனது. இதனையடுத்து அங்குள்ள மூன்று பெண்களை கைது செய்வதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. எமது தரப்பு அனைத்தையும் காணொளி எடுத்து வைத்துள்ளது.

அங்கு காவல்துறையினரின் கடமைக்கு இடையூறாக செயற்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள். காவல்துறையினரின் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இதன்போது காவல்துறையினரால் எவரும் தாக்கப்படவில்லை. அனைத்து விடயங்களையும் காணொளி எடுத்து வைத்துள்ளதாக” யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர் தெரிவித்தார்.

நேற்றைய தினம் காவல்துறையினர் குறித்த பகுதிக்கு சென்று அங்குள்ள சிறிய ரக பாரவூர்தி தொடர்பாக விசாரணையில் ஈடுபட்ட போது குழப்பநிலை ஒன்று தோன்றியதாகவும் இதன்போது தாங்கள் தாக்கப்பட்டதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.

இதில் காயமடைந்த மூவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு இந்த விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்க்கும் தொலைபேசி ஊடாக முறைப்பாடு செய்யப்பட்டதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

காயமடைந்த பெண்களிற்கு உணவு கொண்டு சென்ற 2 பெண்கள் கைது! 

இதேவேளை இச் சம்பவத்துடன் தொடா்புடைய வடமராட்சி கிழக்கு குடத்தனையை சேர்ந்த இரண்டு பெண்கள் இன்று (1) மாலை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு, வைத்திய சாலை அனுமதிப் பத்திரத்துடன் உணவு எடுத்துச் சென்ற இரு பெண்களை பருத்தித்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். டி24 மற்றும் 26 வயதுடைய பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடத்தனையில் இருந்து மந்திகையில் உள்ள பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்குச் செல்லும் வழியல் மாவடிச் சந்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
Previous Post Next Post