யாழில் பெண்ணிடம் தாலிக் கொடி அறுத்த திருடர்கள்! சில மணிநேரத்தில் சிக்கியது எப்படி?

நவாலி சின்னப்பா வீதியில் சென்ற இளம் குடும்பப் பெண்ணிடம் 11 பவுண் தாலிக் கொடியை அபகரித்துச் சென்ற கொள்ளையன் சில மணி நேரங்களிலேயே மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

முச்சக்கர வண்டியில் சென்ற கொள்ளையர்கள் இருவரே இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். முச்சக்கர வண்டியின் இலக்கத்தைவைத்து கொள்ளையர்கள் இருவரையும் பொலிஸார் கைது செய்தனர்.

சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 11 தங்கப் பவுண் தாலிக்கொடியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இந்த வழிப்பறிக்கொள்ளைச் சம்பவம் நேற்றுச் சனிக்கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்றது.

நவாலி சின்னப்பா வீதியில் சென்ற பெண்ணின் தாலிக் கொடி முச்சக்கர வண்டியில் வந்து இறங்கிய ஒருவரால் அபகரிக்கப்பட்டது. அந்த முச்சக்கர வண்டியின் சாரதி வாகனத்திலேயே தயாராகவிருந்த நிலையில் மற்றைய கொள்ளையன் இறங்கி வந்து தாலிக்கொடியை அறுத்துச் சென்றார் என்று பாதிக்கப்பட்ட இளம் குடும்பப் பெண்ணால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.  முறைப்பாட்டில் முச்சக்கர வண்டியின் இலக்கமும் வழங்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார், முச்சக்கர வண்டியின் இலக்கைத்தை அடிப்படையாகக் கொண்டு அதன் உரிமையாளரைக் (சாரதி) கைது செய்தனர்.

அவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தாலிக் கொடியை அறுத்தவரை இன்று பின்னிரவு 11 மணியளவில் பொலிஸார் கைது செய்தனர்.
Previous Post Next Post