முதலாவது தேர்தல் முடிவுகள் எப்போது வெளியாகும்? தேர்தல் ஆணைக்குழு தகவல்!!

ஒன்பதாவது பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற பொதுத் தேர்தலின் வாக்களிப்பு இன்று மாலை நிறைவடைந்தது. இன்றைய தேர்தல் வாக்களிப்பு வீதம் 70 சதவீதமாக அமைந்திருந்ததாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

நாளை பிற்பகல் 3.00 மணியளவில் முதலாவது பெறுபேற்றை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும், இறுதி பெறுபேறு நாளை நள்ளிரவு அளவில் வழங்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5.00 மணிக்கு நிறைவடைந்தது. நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டிருந்த 12,885 மத்திய நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 16,263,885 வாக்காளர்கள் இதில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.


நாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளை கடைப்பிடித்து தேர்தல் பணிகள் நடைபெற்றன. தற்பொழுது பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்கு பெட்டிகள் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. 

நாளைய தினம் (6) இந்த வாக்கு பெட்டியில் உள்ள வாக்குகள் எண்ணும் நடவடிக்கை மத்திய நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்படவுள்ளன. இதற்கு அமைவாக, நாளைய தினம் வாக்கெண்ணும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.


வாக்கு பெட்டிகள், கடித ஆவணங்கள் உள்ளிட்டவை வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கப்பட்ட மத்திய நிலையங்களுக்கு எடுத்துச்செல்லும் நடவடிக்கை தற்பொழுது இடம்பெறுகின்றது. அங்கு அவை சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்க முடியும்.

வாக்குகள் எண்ணப்படும் மத்திய நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படவிருப்பதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். 

வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 7.00 மணிக்கும் 8 மணிக்கும் இடையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. முன்பு நடைபெற்ற தேர்தல்களிலும் பார்க்க இன்று நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தல் மிகவும் அமைதியாக இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுகாதார பாதுகாப்பு மற்றும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெற்றதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மாவட்ட ரீதியில் பதிவாகியுள்ள வாக்களிப்பு வீதங்கள் பின்வருமாறு அமைந்திருந்தது.
  • கொழும்பு மாவட்டம்- 67%
  • களுத்துறை மாவட்டம்- 70%
  • கண்டி மாவட்டம்- 72%
  • மாத்தளை மாவட்டம்- 72%
  • நுவரெலியா மாவட்டம்- 75%
  • காலி மாவட்டம் - 70%
  • மாத்தறை மாவட்டம்- 71%
  • ஹம்பாந்தோட்டை மாவட்டம்- 76%
  • யாழ்ப்பாணம் மாவட்டம்- 67.72%
  • வன்னி மாவட்டம்- 73%
  • மட்டக்களப்பு மாவட்டம்- 76%
  • திஹாமடுல்ல மாவட்டம்- 73%
  • திருகோணமலை மாவட்டம்- 73%
  • குருநாகல் மாவட்டம்- 60%
  • புத்தளம் மாவட்டம்- 64%
  • அனுராதபுரம் மாவட்டம்- 70%
  • பொலன்னறுவை மாவட்டம்- 72%
  • பதுளை மாவட்டம்- 74%
  • மொனராகலை மாவட்டம்- 75%
  • இரத்தினபுரி மாவட்டம்- 71%
  • கேகாலை மாவட்டம்- 71%
  • கிளிநொச்சி மாவட்டம்- 71.52%
  • மன்னார் மாவட்டம்- 79.49%
  • வவுனியா மாவட்டம்- 74%
  • முல்லைத்தீவு மாவட்டம்- 76.25%
  • கம்பஹா மாவட்டம்- 63%
Previous Post Next Post