மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணி – மேலும் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்களுக்கு இன்று (டிசெ. 13) ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
  • கொக்குவில் - 1
  • தெல்லிப்பழை - 3
  • அளவெட்டி - 2
  • உரும்பிராய் - 1
  • நவாலி - 1
  • கீரிமலை - 2
  • மானிப்பாய் - 2
  • உடுவில் - 2
  • இணுவில் - 2
  • சங்கானை - 1
  • பண்டத்தரிப்பு - 1
  • சுன்னாகம் - 2
  • கைதடி - 1 
  • ஏழாலை - 3
  • காங்கேசன்துறை - 1
  • சண்டிலிப்பாய் - 1 
ஆகியோரே கண்டறியப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

இதன்மூலம் மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணியினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 33ஆக உயர்வடைந்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள முதலாவது கொரோனா வைரஸ் பரவல் கொத்தணி இதுவாகும். நாட்டில் ஒக்டோபர் 4ஆம் திகதிககுப் பின்னர் மினுவாங்கொட, பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணிக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள 4ஆவது கோரோனா வைரஸ் கொத்தணி இதுவாகும்.

சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடுமுழுவதும் எழுமாறாக தெரிவு செய்யப்படுவோரிடம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனடிப்படையில் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரியின் பணிப்பில் மருதனார்மடம் சந்தி முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் உள்ள சாரதிகளிடம் கடந்த புதன்கிழமை மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

அந்தப் பரிசோதனையின் முடிவில் மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரியாகவும் முச்சக்கர வண்டி சாரதியாகவும் உள்ள 38 வயதுடைய குடும்பத்தலைவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இரவு கண்டறியப்பட்டது.

அதனையடுத்து அவர் கோவிட் – 19 சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டார். அவரது குடும்பம் உடுவில் பிரதேச சபை ஒழுங்கையில் உள்ள அவர்களது வீட்டில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் அறிவுறுத்தலில் மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனைச் சூழவுள்ள வியாபார நிலையங்களில் உள்ளவர்கள் என 394 பேரிடம் இன்று சனிக்கிழமை மாதிரிகள் பெறப்பட்டன.

மாதிரிகள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன.

நேற்றைய பரிசோதனையில் முச்சக்கர வண்டியின் சாரதியின் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டன. அவர்கள் கோப்பாய் கல்வியற் கல்லூரி கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டனர்.

நேற்று பெறப்பட்ட மாதிரிகளில் ஏனையோரின் பிசிஆர் பரிசோதனையும் இன்று மீளவும் பெறப்பட்ட மாதிரிகளின் பிசிஆர் பரிசோதனையின் முடிவுகளும் இன்றிரவு வெளியிடப்பட்டுள்ளன.
Previous Post Next Post