மானிப்பாயைச் சேர்ந்த தாய், மகள் உட்பட யாழில் ஆறு பேருக்கு கொரோனா!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வடக்கு மாகாணத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

மானிப்பாயைச் சேர்ந்த தாயும் மகளும் உள்பட யாழ்ப்பாணத்தில் 6 கோவிட் -19 நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 304 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 427 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 பேரும் வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் தலா ஒருவரும் கண்டறியப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் கொரோனா தோற்று அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட மானிப்பாயைச் சேர்ந்த தாயும் மகளுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், யாழ்ப்பாணம் மாநகர நவீன சந்தை வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றும் 21 வயது இளைஞன் ஒருவர் தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட நிலையில் கோவிட் -19 நோய்த்தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதகாரி பிரிவில் வசிக்கும் 15 வயதுச் சிறுமிக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் பயிலும் மாணவர்கள் இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலை பெண் பணியாளர் ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி மரக்கறி சந்தையில் சிலரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் பெண் வியாபாரி ஒருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பரந்தனைச் சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
Previous Post Next Post