யாழ்.பெண்ணைக் காதல் திருமணம் செய்த வவுனியா இளைஞன்! வீடு புகுந்து தாக்குதல் நடத்திய பெண்ணின் உறவுகள்!!

யாழில் இருந்து வெள்ளை வானில் வாள்களுடன் வருகை தந்த குழு ஒன்று இரு வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா, மூன்று முறிப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வாடகைக்கு குடியிருக்கும் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம், ஓட்டுமடத்தடியைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்துள்ளதுடன், பெண் வீட்டார் சம்மதமின்றி குறித்த பெண்ணை அழைத்து வந்து பதிவு திருமணமும் செய்துள்ளார்.

இந்நிலையில், யாழில் இருந்து வெள்ளை வான் ஒன்றில் வருகை தந்த குறித்த பெண்ணின் தந்தை, சகோதரி மற்றும் வாள்களுடன் வந்த 10 மேற்பட்ட இளைஞர் குழு, குறித்த இளைஞன் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டு உரிமையாளரின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது வீட்டு உரிமையாளரின் மகள் பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது இளைஞர் ஒருவர் குறித்த பெண்ணின் கழுத்தில் வாளினை வைத்து அச்சுறுத்தியதாகவும் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த வீட்டு வளவில் அமைந்துள்ள இளைஞன் வாடகைக்கு குடியிருக்கும் வீட்டிற்குள்ளும் வாள்களுடன் புகுந்த குறித்த குழுவினர், வீட்டு அறையின் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன், அங்கு இருந்த வீட்டு தளபாடங்களையும் சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த இளைஞர் குழு கறுப்பு துணிகளால் முகத்தை மறைத்து கட்டியிருந்ததாகவும், இரு வெள்ளை நிற வான்களில் வந்ததாகவும் தெரிவித்துள்ள பாதிக்கப்பட்டோர், குறித்த இளைஞர்கள் யாழில் இருந்து வருகை தந்த ஆவா குழுவா என அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலமைகளை பார்வையிட்டதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.


Previous Post Next Post