ஆதாயத்துக்காக அழிக்கப்படும் பிஞ்சு உயிர்கள்! மாமிச வெறியர்களின் கொடூரம்!! தடை விதித்தது பிரான்ஸ்!!!


  • பாரிஸிலிருந்து குமாரதாஸன்.
முட்டைப் பண்ணைகளில் பொரித்த கையோடு சேவல் குஞ்சுகளை வேண்டத் தகாதவையாக இனப்பாகுபடுத்திப் பிரித்துக் கொல்கின்ற நடைமுறை அடுத்த ஆண்டு (2022)ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் தடைசெய்யப்படுவதாக பிரான்ஸ் அறிவித்திருக்கிறது.
 
பொரித்த குஞ்சுகளில் ஆண் இனத்தைவகை பிரித்துக் கொல்லுகின்ற(crushing and gassing of male chicks) நடைமுறையை இல்லாதொழிக்கின்ற முதல் நாடு என்ற
பெருமை இதன் மூலம் பிரான்ஸிற்குக் கிடைக்கிறது. 

ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இதனைப் பின்பற்றித் தடைகளை அறிவிக்க வேண்டும் என்று பிரான்ஸின் விவசாய அமைச்சர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இறைச்சி மற்றும் முட்டை மீதான நுகர்வு வெறியால் பறவைகள் விலங்குகள் மீது மனிதனால் புரியப்பட்டுவருகின்ற வன் கொடுமைகள் விவரிக்க முடியாதவை.

பெரும் தொழிற்சாலைகள் போன்ற கோழி முட்டைப் பண்ணைகளில் நிகழும்
கொடுமைகள் முட்டையையும் இறைச்சியையும் ரசித்துப் புசிக்கின்றவர்களது
கண்களுக்குக் காலாதி காலமாக மறைக் கப்பட்டே வருகின்றன.

பொரித்து ஓரிரு நாட்களேயான கோழிக் குஞ்சுகளில் ஆண் குஞ்சுகளைத் தெரிவு செய்து அவற்றை நசித்தும் நச்சுப் புகை யூட்டியும் கொல்லுகின்ற கொடுமையை உலகம் எந்த உறுத்தலும் இன்றி அனுமதித்துவிட்டுள்ளது.

பெரும் பண்ணைகளில் வணிக நோக்கில் மிகையாகப் பொரிக்க வைக்கப்படுகின்ற குஞ்சுகளில் ஆண் குஞ்சுகளால் ஆதாயம் ஏதுமில்லை எனக்
கருதி அவை ஒதுக்கப்பட்டுக் கொத்தாகக் கொல்லப்படுகின்றன. முட்டையிடுகின்ற பெண் குஞ்சுகளுக்கே அங்கு மவுசு. லாபம் இல்லையேல் உயிருக்கு எங்கும் மதிப்பேதும் இல்லை என்ற நிலை.

பிரான்ஸில் மட்டும் ஆண்டு தோறும் இவ்வாறு நசித்துக் கொல்லப்படுகின்ற ஆண் குஞ்சுகளின் எண்ணிக்கை ஐம்பது மில்லியன்கள் ஆகும். 

குப்பையைப் போல குஞ்சுகள் வாரிக்குவிக்கப்பட்டு இயந்திரங்களுக்குள் கொட்டி நசுக்கப்படுகின்ற - மனதை உருக்கும்-காட்சிகள் அவ்வப்போது வெளியே தெரிய வந்தாலும் உலகம் அந்த உயிர்க் கொலைகளைக் கணக்கில் எடுப்பதே இல்லை. மாமிச வெறியும் வணிக லாப நோக்கங்களும் மனி குணாம்சங்களை அடியோடு மாற்றிவிட்டுள்ளன.
 
பிறந்த குழந்தைகளை மறுநாளே இப்படி நசித்துக் கொல்ல மனித மனம் இடம் கொடுக்குமா?-இவ்வாறு கேள்வி எழுப்புவோர் இந்தக் கொடுமையை நிறுத்துவதற்காக ஓயாமல் குரல் கொடுத்து வருகின்றனர்.
 
விலங்குகள்,பறவையினங்களது உரிமைகளை மதிக்குமாறு கேட்டுப் போராடும் அமைப்புக்களது இடைவிடாத கோரிக்கைகளை ஏற்றுக் கோழிக் குஞ்சுகள் மீதான இந்தக் கொடுமையை முடிவுக்குக் கொண்டுவரப் போவதாக பிரான்ஸ் அரசு அறிவித்திருக்கிறது.

குஞ்சுகள் பொரித்த பிறகு அது பேடா சேவலா என்று தரம்பிரித்துக் கொல் லுகின்ற தற்போதைய நடைமுறைக்கு மாற்றாக முட்டைக்குள் கருவாக உள்ள நிலையிலேயே ஆண் குஞ்சுகளை இனங்கண்டு அந்த முட்டைகளை ஒதுக்கிவிடுகின்ற நவீன தொழில் நுட்ப முறைகளைப் பின்பற்றுமாறு முட்டைப் பண்ணையாளர்கள் கேட்கப்பட்டுள்ளனர்.

கருவில் ஆண் கோழிக் குஞ்சுகளை அறிகின்ற முறை "direct-in-the-egg sexing techniques" எனப்படுகிறது. முட்டைக் கோது மீது நுண் துளையிட்டுச் செய்யப்படுகின்ற இயந்திரத் தொழில்நுட்பப் பரிசோதனை முறை அது.

ஆனால் இந்த நவீன நடைமுறை பெரும் நிதி மற்றும் கால விரயம் மிகுந்தது என்று பண்ணை யாளர்கள் கருதுகின்றனர். இதனால் முட்டை விலையை அதிகரிக்கவேண்டி வரும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர்.

தொழில் நுட்பங்கள் மூலம் விலங்குகள் பறவைகளைக் கருவிலேயே ஆண் பெண் என இனப்பாகுபடுத்தி வகை பிரி க்கின்ற முறைகளையும் விலங்கு உரிமை பேணும் அமைப்புகள் எதிர்க்கின்றன.
 
பிறந்த பிறகு கொல்வதோ அல்லது கருவில் கண்டறிந்து அழிப்பதோ அது எதுவாக இருந்தாலும் உயிரினங்களது உரிமைகளை மீறுகின்ற எந்த வடிவத்திலான கொடுமைகளையும் அனுமதிக்க முடியாது என்று L214 போன்ற அமைப்புகள் வாதிடுகின்றன.

பூமியின் வெப்பமும் கால நிலையின் கோரத் தாண்டவங்களும் அதிகரித்துவ ருவதற்குக் கால்நடைகளும் கோழிகள் போன்ற பறவைகளும் வகை தொகை
இன்றி இனப்பெருக்கப்படுவது ஒரு முக்கிய காரணம் என்று அறிவியலாளர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

மனிதர்களது மாமிச நுகர்வு வெறி குறைக்கப்பட வேண்டும். அல்லது மாற்று உயிரியல் வழி முறைகளில் இறைச்சியைத் தயாரிக்கின்ற தொழில் நுட்பங்கள் கண்டறியப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
Previous Post Next Post