பிரான்ஸில் அதிகரிக்கும் கொரோனா! 40 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மூன்றாவது டோஸ் ஏற்றப் பரிந்துரை!!


  • குமாரதாஸன். பாரிஸ்.
பிரான்ஸில் வைரஸ் தொற்று சடுதியாகஅதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நாட்டின் சனத்தொகையினரில் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன் றாவது ஊக்கித் தடுப்பூசி ஒன்றை(une dose de rappel) ஏற்றுவதற்கு பொதுச் சுகாதார அதிகாரசபை (la Haute Autorité de Santé) பரிந்துரைத்திருக்கிறது.

முதலாவது தடுப்பூசி ஏற்றி ஆறு மாதங்களுக்குப் பிறகு மூன்றாவது ஊக்கித் தடுப்பூசி ஒன்றை ஏற்றுவது நாற்பது வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்குப் பயனளிக்கக் கூடியது.நாடு முழுவதும் தொற்றுநோய் மீண்டும் மேலெழுவதாலும் தடுப்பூசிகளது எதிர்ப்புத் திறனில் வீழ்ச்சி காணப்படுவதாலும் - ஊக்கத் தடுப்பூசி ஒன்றை மக்கள் தொகையினரில் பொருத்தமானவர்களுக்கு விரிவுபடுத்தப் பரிந்துரைக்கிறோம்.

-இவ்வாறு நாட்டின் சுகாதார அதிகார சபை ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இதேவேளை, இந்தப் பரிந்துரை வெளியாகுவதற்கு முன்னராக ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கிய அதிபர் மக்ரோன், "மூன்றாவது தடுப்பூசியை அனைவருக்கும் வழங்குவதை விஸ்தரிப்பதற்காக சுகாதார அதிகார சபையின் பரிந்துரைக்குக் காத்திருக்கிறோம்" என்று கூறியிருந்தார்.

அதிபர் மக்ரோன் நாட்டின் மேல் மாவட்டங்களில்(Hauts-de-France) விஜயம் மேற்கொண்டுள்ளார்.அதற்கு முன்பாக அப் பிராந்திய செய்தி ஊடகமான" La Voix du Nord"செய்தியாளருக்கு எலிஸே மாளிகையில் வைத்து விசேட செவ்வி ஒன்றை அவர் வழங்கினார்.

ஒஸ்ரியா, ஜேர்மனி போன்று பிரான்ஸிலும் தடுப்பூசி ஏற்றாதவர்களுக்குத் தனியான பொது முடக்கக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுமா? - என்று அந்த செவ்வியில் அவரிடம் கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த மக்ரோன்," இல்லை. அவ்வாறு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியமான நிலை நாட்டில் ஏற்படவில்லை" எனப் பதிலளித்தார்.
  • ஒஸ்ரியாவில் தேசிய முடக்கம்
ஐரோப்பிய நாடுகளை மீண்டும் ஒரு முறை கொரோனா அலை தாக்கத் தொடங்கியுள்ளது. மிக மோசமான தொற்று நிலைவரத்தை எதிர்கொள்கின்ற ஒஸ்ரியா, ஜேர்மனி போன்ற நாடுகள் இறுக்கமான கட்டுப்பாடுகளை மீளவும் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளன.

முதலில் ஊசி ஏற்றாதவர்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளை அறிவித்திருந்த ஒஸ்ரியா,திடீரென நாட்டு மக்கள் அனைவருக்குமான தேசியப் பொது முடக்கம் ஒன்றை வரும் திங்கள் முதல் இருபது நாட்களுக்கு அறிவித்திருக்கிறது. அத்துடன் அங்கு அடுத்த வருடம் பெப்ரவரி முதல் தடுப்பூசி ஏற்றுவது அனைவருக்கும் கட்டாயமாகிறது. அதன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தனது மக்களுக்குத் தடுப்பூசியைக் கட்டாயமாக்குகின்ற முதல் நாடாக ஒஸ்ரியா மாறியுள்ளது.
Previous Post Next Post