2 மாத கருவைக் கலைக்க முற்பட்டதாலேயே உயிரிழப்பு! முல்லைத்தீவில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!!


முல்லைத்தீவு, மூங்கிலாறில் பற்றைக்காணிக்குள் சடலமாக மீட்கப்பட்ட 12 வயதுச் சிறுமி, அவரது அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்துள்ளார் என்று சட்ட மருத்துவ வல்லுநர் அறிக்கையிட்டுள்ளார்.

சிறுமியின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. சிறுமிக்கு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட கருக்கலைப்பின் போதே உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது.

அதனடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று புதுக்குடியிருப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

யோகராசா நிதர்ஷனா (வயது-12) என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டார்.

திருகோணமலையில் மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்ற அவர், கடந்த ஜூலை மாதம் வீடு திரும்பியிருந்தார். அதன்பின்னர் அவர் வீட்டிலேயே தங்கியிருந்தார்.

கடந்த 15ஆம் திகதி அவர் காணாமற்போனார் என்று புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

சிறுமி வீட்டிலிருந்து சுமார் 300 மீற்றர் தூரத்தில் உள்ள பற்றைக் காணி ஒன்றில் நேற்று 19ஆம் திகதி ஆடைகள் கலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் இடம்பெற்றது.

சிறுமியின் பெண் உறுப்பில் ஏற்பட்ட காயம் காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது என்று சட்ட மருத்துவ வல்லுநர் சட்ட மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post