Update: வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். நபர் விபரீத முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த நபர் சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் என்ற 32 வயதான குடும்பஸ்தரே மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் பொருளாதார சூழல் காரணமாக புலம்பெயர முயற்சித்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். இவருக்கு பிறந்து ஆறு மாதங்களே ஆன பெண் குழந்தையும் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர வழியறியாது குடும்பத்தினர் தவித்து வருவதோடு, சம்பந்தப்பட்ட தரப்புக்களின் உதவியை எதிர்பார்த்து நிற்கின்றனர்.

இலங்கைத் தமிழ் அகதிகள் 303 பேருடன் கனடா நோக்கி பயணித்த மீன்பிடிப் படகு மூழ்கியதையடுத்து, அதில் பயணித்தவா்கள், சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு கடந்த (08.11.2022) வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த நிலையில் தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு மீள திரும்ப போவதில்லை என தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் தெரிவித்து வருகின்றனர்.

எனினும் வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாடு கடத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தாம் இலங்கையை நோக்கி திரும்ப போவதில்லை எனவும் தெரிவித்து, அகதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தற்கொலைக்கு முயற்சித்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், தீவிர சிகிச்சை பெற்று வந்த நபரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.

தொடர்ப்புடைய செய்தி: 
Previous Post Next Post