பிரான்ஸில் திங்கள் முதல் பாஸ் நடைமுறை அமுலுக்கு வருகிறது!


  • குமாரதாஸன், பாரிஸ்.
பிரான்ஸில் நாடு முழுவதும் கட்டாய சுகாதாரப் பாஸ் நாளை திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது.அதேவேளை கட்டாய தடுப்பூசியையும் சுகாதாரப் பாஸையும் எதிர்த்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்கள் நேற்றுத் தீவிரமடைந்தன.

குழப்பமான வானிலைக்கு மத்தியில் நாட்டின் பல நகரங்களிலும் நேற்று நான்
காவது சனிக்கிழமையாக நடந்த ஆர்ப்பாட்டங்களில் இரண்டு லட்சத்து 37 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர் என்ற உள்துறை அமைச்சு மதிப்பிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமையை விட இந்த எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் அதிகரித்துள்ளது.

கோடை விடுமுறை காலப் பகுதியாக இருந்த போதிலும் மக்கள் இவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
இதேவேளை கட்டாய சுகாதாரப் பாஸ் நாளை திங்கள் தொடக்கம் நடைமுறைக்கு வருவதை உறுதிப்படுத்திய அரச பேச்சாளர் கப்ரியேல் அட்டால் தொடக்கத்தில்- முதல்வாரத்தில்-சோதனைகள், அபராதம் விதிப்பு என்பன மிக இறுக்கமாக இருக்க மாட்டாது என்று தெரிவித்தார்.

உணவகங்கள், கடைகள்,சினிமா போன்ற பல தொழிற்துறையினரும் பாஸ் முறையை நடைமுறைப்படுத்திப் பார்ப்பதற்கு ஆரம்பத்தில் ஓர் சந்தர்ப்பம் - இடைவெளி-வழங்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். 
  • மருத்துவமனைகளுக்கு செல்லவும் பாஸ் அல்லது பரிசோதனை அவசியம்
மருத்துவமனைகள், மருத்துவ சிகிச்சை நிலையங்கள் போன்ற இடங்களிலும்
சுகாதாரப் பாஸ் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் அமுலுக்கு வரவுள்ளது.

அவசர நோயாளர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் சுகாதாரப் பாஸ் (le QR Code affiché sur le certificat récupéré après la dernière dose reçue), அல்லது 72 மணித்தியாலங்களுக்குள் செய்யப்பட்ட தொற்றுப் பரிசோதனை(un test PCR négatif de moins de 72h) அல்லது வைரஸ் தொற்றி அதிலிருந்து குணமடைந்ததை நிரூபிக்கின்ற மருத்துவச் சான்றிதழ் (un certificat de rétablisse ment du Covid-19) ஆகியவற்றில் ஒன்றை காண்பித்தே மருத்துவமனைகளுக்குள் பிரவேசிக்க முடியும்.

நோயாளர்களைப் பார்வையிடுவதற்காகவும் பராமரிப்பதற்காகவும் ஆஸ்பத்திரி செல்வோருக்கும் பாஸ் கட்டாயமாகும்.

இந்த நடைமுறை சகல மருத்துவமனைகள், கிளினிக்குகள், மூதாளர் பராமரிப்பு நிலையங்கள், ஓய்வூதியர் காப்பகங்கள் (aux hôpitaux, établissements médico-sociaux, aux Ehpad et maisons de retrait) மருத்துவமனைகளில் கட்டாய பாஸ் விதிகள் இறுக்கமாக நடைமுறைப் படுத்தப் பட்டாலும் பாஸ் வைத்திருக்காத காரணத்துக்காக எவரும் சிகிச்சைகளில் இருந்துவிலக்கி வைக்கப்பட மாட்டார்கள் என்று சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
  • தூர ரயில்களில் பாஸ் கட்டாயம் பயண வழிகளில் திடீர் பரிசோதனை
நீண்ட தூர ரயில்களில் சுகாதாரப் பாஸ் கட்டாயமாகிறது. TGV (Inoui et Ouigo), les Intercités (avec et sans réservation, ainsi que les trains de nuit) et les trains internationaux au départ de la France.
 
நீண்ட தூர ரயில், பஸ் பயணங்களில் எல்லா சந்தர்ப்பங்களிலும் பயணிகள் ஏறும் போது அங்கு வைத்து சுகாதாரப்பாஸ் சோதனை செய்யப்பட மாட்டாது.

ஆனால் ரிக்கெற் பரிசோதனை செய்வது போன்று பயண வழியில் திடீர் திடீர் என சுகாதாரப் பாஸ் சோதனைகளும் இடம்பெறலாம். சுகாதாரப் பாஸ் வைத்திருக்காத பயணி தொடர்ந்து பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார். ஆனால் அபராதம் செலுத்த நேரிடும். (135 ஈரோ).

செப்ரெம்பர் மாதத்தில் இருந்து பயணச்சீட்டுடன் சுகாதாரப் பாஸை இணைப்பதற்கான வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும். அதுவரை சோதனைகள் இடம்பெறும். ரிக்கெற் வாங்கும் போதே பாஸை உறுதிப்படுத்திக் கொள்ளும் நடைமுறை அது.

பாரிஸ் மற்றும் புற நகரங்களுக்கான சேவைகளில் ஈடுபடுகின்ற மெற்றோ, RER, TER, ட்ரான்சிலியன் (TER et les trains de la banlieue parisienne - Transilien) ரயில் பயணங்களுக்கு பாஸ் நடைமுறை பொருந்தாது.

உணவகங்கள், அருந்தகங்கள், பெரிய வணிக வளாகங்கள் போன்ற இடங்களிலும் சுகாதாரப் பாஸ் கட்டாயமாகின்றது.
Previous Post Next Post