அதிபரின் தாக்குதலில் மாணவனின் செவிப்பறை செயலிழந்தது!


காரைநகர் இந்துக் கல்லூரி அதிபர் தாக்கியதில் க.பொ.த. சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவரின் ஒரு பக்கக் காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மாகாண கல்வி அமைச்சின் அறிவுறுத்தலில் ஒழுக்காற்று விசாரணையும் நடைபெறவுள்ளது என்று தெரியவருகின்றது. 

கடந்த வெள்ளிக்கிழமை அதிபர் தாக்கியுள்ளார். காதில் ஏற்பட்ட வலி காரணமாக மாணவன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை சேர்க்கப்பட்டுள்ளார்.

மருத்துவ சோதனையில் மாணவனின் ஒரு காதின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சட்ட மருத்துவ அதிகாரியின் விசாரணைகள் இடம்பெற்றது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டினைப் பெற்ற யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிக்கையிட்டுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் அறிந்த வடக்கு மாகாண கல்வி அமைச்சு உரிய விசாரணைகளை முன்னெடுத்து அறிக்கையிடுமாறு அதிகாரிகளுக்கு பணித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மாணவனை அழைத்த அதிபர் காற்சட்டை பொக்கெற்றுக்குள் கைகளை வைத்திருக்குமாறு தெரிவித்துவிட்டு 7 தடவைகள் காதுகளில் அறைந்துள்ளார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களை அங்கங்கள் பலவீமடையும் வகையில் தாக்குவது சித்திரவதை என்ற அடிப்படையில் தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post