இன்று முதல் மீண்டும் மின் துண்டிப்பு!


மின்சார உற்பத்திக்கான எரிபொருள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் மின்சார உற்பத்திக்காக தற்போது கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை போதுமானதா? இல்லையா? என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று முதல் மீண்டும் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்றைய தினம் ஒரு மணிநேரமும், நாளை முதல் சுமார் 2 மணிநேரமும் மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என அந்த சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரட்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பிரச்சினை இவ்வாறு நீடித்து, மழைவீழ்ச்சியும் கிடைக்கப்பெறாவிட்டால் மார்ச் மாத இறுதியில் மின்சார விநியோகத்திற்கு பாரிய பாதிப்பு ஏற்படும்.

எனவே, மாலை 6.30 முதல் 9 மணி வரையான காலப்பகுதியிலேயே அதிகளவான நேரத்திற்கு மின் துண்டிப்பு இடம்பெறும்.

பிற்பகல் 2.30 முதல் 4 கட்டங்களாக மின் துண்டிப்பை மேற்கொள்வதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்காக இன்றைய தினம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அதற்கான அனுமதியை வழங்கினால் மின் துண்டிப்பு இடம்பெறும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க விமலரட்ன குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post