ஓலைத்தொடுவாய் வீதியூடாக பயணித்த முச்சக்கரவண்டியொன்று திரும்பிய போது பின்புறமாக தலைமன்னார் பகுதியிலிருந்து மன்னார் நோக்கி வேகமாக வந்த மீன் ஏற்றும் கூலர் வாகனம் மோதியதில் முச்சக்கரவண்டியும், அதில் பயணித்தவர்களும் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான தாய் சந்தியோகு செல்வி (வயது 30), மகன்களான கெபின் கரன் (வயது 6), கானோர் (வயது 1) மற்றும் முச்சக்கரவண்டி சாரதி ஆகியோர் பேசாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 6 வயது கெபின் கரன் மன்னார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஏனைய மூவரும் தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் கூலர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.